“காசி யாத்திரை செல்பவர்கள், எதையாவது ஒன்றை அங்கேயே விட்டுவிட்டு வர வேண்டும் என்பது ஏன்?”
தொணதொணவென்று காதைக் குடையும் ஹார்ன் ஒலிபரப்பு இடையறாது நிகழ்ந்த பரபரப்பான அந்த சாலையில், பஸ் ஸ்டாப்பை ஒட்டியிருந்த சாலையோரத்து அரச மரத்தடியில், இருந்த கோலத்தில் சுமார் மூன்றடிக்கு, அருகம்புல் மாலையணிந்து, அந்தப் பிள்ளையார் தேமே என்று வீற்றிருந்தார். காலடியில் தக்குணூன்டு மூஞ்சூறு.
“ஏன் பாட்டி, இத்துனூண்டு எலி போய் இவ்ளோ பெரிய புள்ளையாரை எப்படித் தூக்கிண்டு போக முடியும்?’ என்று இரண்டடி உயரம் இருந்தபோதே லாஜிக்கல் வினா எழுப்பி,
“அடேய் துர்வாசா.. அர்த்த ராத்திரியில நீ பொறந்தப்பவே நெனச்சேன் இந்தப் புள்ளை என்னவெல்லாம் பாடு படுத்தப் போறதோன்னு.. இப்படியெல்லாம் எடக்கு முடக்கா எதையாவது கேட்டுண்டே இருந்தா, அப்புறம் உம்மாச்சி கண்ணைக் குத்திடும்.. ஒழுங்கா மரியாதையா தோப்புக்கரணம் போட்டு, தலையில குட்டிண்டு, மன்னிப்பு கேளு அவர்கிட்ட..” என்று துவக்கப் பள்ளிக் காலத்தில் நான் பாட்டியிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட காலத்துக்கும் முன்பாகவே, அவரும், மூஞ்சூரும் அங்கேயேதான் இருக்கின்றனர்.
அரசமரத்தடி பிள்ளையார் என்ற பொதுப்பெயரால்தான் அவரை எல்லோரும் அழைப்பார்கள். சதுர்த்தி திதியன்று கொஞ்சம் ஸெலிப்ரிட்டி மாதிரி பக்த கோடிகள் புடைசூழ இருப்பார். ஹெல்மெட் அணியாத மெஜாரிட்டி ஸ்கூட்டர்/பைக் ஓட்டுனர்களின் ஸ்லாலோம் திறமையை பரீட்சித்துப் பார்க்கும் விதமாக, அன்று நிறைய சிதர் காய்கள் படார்.. படார்.. என்று சாலையில் உடைபடும். அந்தப் பேட்டை ப்ளாட்ஃபார்ம் வாசிகள் சிலர் கோணியுடன் உடைந்த தேங்காய் சில்லுகளை சேகரிக்க ஆர்வமாகக் காத்திருப்பார்கள்.
விநாயகர் சதுர்த்தியின் போது லௌட் ஸ்பீக்கரில் ‘விநாயகனே.. வினை தீர்ப்பவனே..’ என்று ட்ரேட்மார்க் கணீர் குரலில் சீர்காழி கோவிந்தராஜன் அதிகாலையில் பாடி நம்மை எழுப்ப, குலை தள்ளிய வாழை மரம், தோரணங்கள், நான்கு கால பூஜை, பக்தர்களுக்கு இலவச பிரசாதம் என்று அரசமரத்தடி அதகளப்படும். டிராஃபிக் போலீஸார் சிலர் கூட அன்று அவ்விடத்தில் தென்படுவர் – நெற்றியில் பூசிய திருநீறுடன்.
விநாயக சதுர்த்திக்கு அடுத்து வரும் நாட்களில், அவரைச் சுற்றி திடீரென்று மேடையில் ஏகப்பட்ட களிமண் பிள்ளையார்கள் உதித்திருப்பார்கள். ஓரிரு தினங்களில் அவர்களெல்லாம் அரச மரத்திற்குப் பின்னால் அடுக்கப்பட்டு, மழையில் கரைந்து காணாமல் போவார்கள்.
கடவுள்களில் மிக எளிமையாக எவர் வேண்டுமானாலும் அணுகக் கூடியவர்களான பிள்ளையார், அனுமார் இருவரையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்பதால், தினமும் பள்ளிக்குப் போகும்போது அவருக்கு ஒரு அவசர குட்டு + வந்தனம் வைத்து விட்டுத்தான் போவேன். பரீட்சை சமயத்தில் பக்தி கொஞ்சம் ஆம்ப்ளிஃபை ஆகி, தோப்புக்கரணம், மரத்தைச் சுற்றி பிரதட்சணம், நெற்றியில் அர்ச்சகர் பூசும் திருநீறு ஆகியவையும் சேர்ந்து கொள்ளும்.
கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, பெருநரகத்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து, அவரை இன்று பார்த்தபோது, பழைய ஞாபகங்கள் ரீவைண்ட் ஆக, இயல்பாகக் குட்டிக் கொண்டு, தோப்புக்கரணம் போட்டு விட்டு, அரச மரத்தை இப்போது சுற்றலாமா.. கூடாதா.. என்று யோசித்தபோது, அவர்களை கவனித்தேன்.
பெருநரகங்களின் அபத்தப் பரபரப்பின்றி, தினசரி வாழ்க்கை ஸ்லோ மோஷனில் நடக்கும் சிற்றூர்களில், ரிட்டயர்மெண்ட்டுக்குப் பிறகு ஸெட்டில் ஆகிவிடும் பாக்கியவான்களின் சர்வே ஸாம்ப்பிள் மாதிரி, பிள்ளையார் கோயில் அருகாமை பஸ் ஸ்டாப் பெஞ்ச்சில் அந்த மூவரும் அமர்ந்திருந்தனர். இருவர் கையில் ஆவி பறக்கும் ஃல்ட்டர் காஃபி. மூன்றாமவரின் காஃபி ஆர்வத்திற்கு அனேகமாக அவரது டயபடீஷியன் [அ] டயட்டீஷியன் முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும். கையிலிருந்த ஹாட் & கோல்ட் பாட்டிலில் இருந்து சுடுநீர் மட்டும் ஸிப்பிக் கொண்டார்.
பஸ் ஸ்டாப்பின் பின்புறமிருந்த ‘மீனாட்சி காபி நிலையம்’ அந்த ஏரியாவில் பிரபலம். முப்பது வருடங்களுக்கு மேலாக தினசரி காலையில் வாக்கிங் போகும் அப்பா, அங்கேயும் ஒரு காஃபி அருந்திவிட்டு வந்து, “ஏற்கனவே செகண்ட் டோஸ் காஃபி அந்தக் கடையில உள்ள போயிருக்குமே.. அடுத்த டோஸ் டிஃபன் சாப்பிட்டதுக்கு அப்புறமாத்தான்..” என்று அம்மாவிடம் செல்லமாக வாங்கிக் கட்டிக் கொள்வார்.
“ஏண்டா ரமேஷ், நம்ம அலமு இஸ் நோ மோர் தெரியுமோ?”
“ம்ம்ம்.. கேள்விப்பட்டேன்.. அப்ப என்னோட பேத்தி புண்யஜனனத்துக்காக பாம்பே போயிருந்தேன்.. ஸோ நேர்ல வர முடியலை..”
“மத்தியானம் சாப்பிட்டுட்டு, ஏதோ புஸ்தகத்தை புரட்டிண்டு, ஈஸி சேர்ல உக்கார்ந்திருந்தாளாம்.. அப்படியே பட்டுன்னு போய்ட்டாளாம்.. வ்வாட் எ வே ட்டு கோ.. உண்மையிலேயே புண்ணியவதிப்பா அவ..”
அவர்களின் சம்பாஷணையில் ஃபீச்சர் ஆன அலமு என்கிற பெண்மணி என் அம்மா. நான்கு குழந்தைகளைப் பெற்று, வளர்த்து, ஆளாக்கி, திருமணம் செய்வித்து, பேரன்/பேத்திகள் பார்த்து, பிள்ளைகள்+பெண் சேர்ந்து நடத்திய ஷஷ்டி அப்த பூர்த்தி.. பீம ரத சாந்தி.. எல்லாம் சிறப்பாக அனுபவித்து விட்டு,
“என்னால யாருக்கும் எந்த தொந்திரவு வந்துடக் கூடாதுடி மீனாக்ஷி.. ஆஸ்பத்திரி.. அட்மிஷன்.. ஐஸீயூ.. மாதிரியெல்லாம் எந்த கண்றாவியும் இல்லாம, பட்டுன்னு சுமங்கலியா போயிடணும்.. அந்த ஒரு வரத்தை மட்டும் எனக்கு குடுத்துடும்மா..” என்று அவளது ஆதர்ச தெய்வமான மதுரை மீனாக்ஷியிடம் தினமும் வேண்டிக் கொண்டு, பட்டென்று ஒரு சாதாரண தினத்தின் மத்தியானம், எழுபத்தோரு வயதில் போயே விட்டாள். அவளது மாசிகம் + ஸோதகும்பத்திற்குத்தான் ஊருக்கு வந்திருக்கிறேன்.
“போன வருஷம் காசிக்கு அவங்களோடதான் நானும், என் வைஃபும் போயிருந்தோம். அங்க எல்லா ஏற்படும் சாரே பண்ணிட்டார். அருமையான யாத்ரா அது.. ப்ச்ச்ச்..”
“ஏண்டா, காசிக்குப் போனா அங்க ஃபேவரிட் ஐட்டம் எதையாவது விட்டுட்டு வரணும்னு சொல்வாங்களே.. நீ என்னத்தை விட்டுட்டு வந்த.?”
“நான் புடலங்காயை விட்டேன்.. என் பொண்டாட்டி சீத்தாப்பழத்தை விட்டுட்டா..”
“ஏண்டா.. புடலங்காயா உன்னோட ஃபேவரிட்? உருளைக்கிழங்குன்னு இல்ல நினைச்சுக்கிட்டிருந்தேன்.! எந்த ஊருக்குப் போனாலும் சிப்ஸை விட மாட்டியே நீ..” என்று வழுக்கைத் தலையர் சிரித்தார். உடனிருந்த இருவரும் சற்று சிக்கனமாக சிரித்தனர்.
தினசரி வாக்கிங் + மீ கா நி ஃபில்ட்டர் காஃபி ரிச்சுவல் முடிந்து அவர்கள் கிளம்புகையில், டை அடித்து சொதப்பாத வெள்ளை முடியைப் படிய வாரியிருந்தவர் என்னை கவனித்து,
“ஏம்ப்பா, நீ சுந்தரேசன் சாரோட எல்டர் ஸன் தினேஷ்தானே..” என்றார்.
“ஆமாம் சார். நமஸ்காரம்.”
“என்னப்பா இது.. உங்க அம்மா இன்னும் கொஞ்சம் காலம் இருந்து, சதாபிஷேகத்தையும் பண்ணிண்ட அப்புறமா போயிருக்கப்படாதோ.. என்ன அவசரம்னு இப்படி படக்குன்னு போய்ட்டா.. ஐம் வெரி சாரி ஃபர் யுவர் லாஸ்ப்பா..”
“அந்த மாதிரி படக்குன்னு போறதெல்லாம் பெரிய பிளெஸ்ஸிங்ப்பா.. உங்க அம்மா குடுத்து வெச்சவன்னு சமாதானப்படுத்திக்க வேண்டியதுதான்..”
“பை தி வே, அப்பா எப்படி இருக்கார்.. ஹொவ் இஸ் ஹீ கோப்பிங்.. இங்கதான் இருக்காரா.. மார்னிங் வாக் எல்லாம் இப்போ வர்றதில்லையோ.?
“ஆமாம் சார்.. அவருக்கு ஹைதராபாத் லைஃப் ஸெட் ஆகலைன்னு, இங்கயே திரும்ப வந்துட்டார். அதனால நான் மாசாமாசம் காரியத்துக்கு வந்துட்டுப் போறேன்.. பை ப்பாஸ் சர்ஜரிக்கு அப்புறமா அப்பார்ட்மெண்ட் காம்பவுண்டுக்கு உள்ளயேதான் வாக் போறார்.. மறுபடியும் வெளியில பிரிஸ்க் வாக்கிங் பண்ண ஆரம்பிக்கல சார்..”
“ஓ, ஐ ஸீ.. நாங்க காசிக்குப் போனப்ப, அவங்க ரெண்டு பேரும்தான் மொத்த யாத்ராவையும் ப்ளான் பண்ணி மேனேஜ் பண்ணினாங்கப்பா.. ஸச் எ லவ்லி கப்பிள்..”
“அவரை விசாரிச்சதா சொல்லுப்பா.. ஹீ நோஸ் ஆல் ஆஃப் அஸ் வெரி வெல்.. அப்புறமா ஒரு நாள் வீட்டுக்கு வந்து அவரைப் பாக்கறோம்..”
“ஷ்யூர் சார்..”
“ப்ளீஸ் ட்டேக் குட் கேர் ஆஃப் ஹிம்.. அம்மா இல்லாம எப்படித்தான் தனியா மேனேஜ் பண்றாரோ.. இங்க யாரு அவரை பாத்துக்கறா.?”
“என்னோட சிஸ்டர் இங்க பக்கத்துலதான் சார் பை ப்பாஸ் ரோட்ல ஒரு அப்பார்ட்மெண்ட்ல இருக்கா. ஷீ விஸிட்ஸ் ஹிம் அல்மோஸ்ட் டெய்லி.. அவரும் வீக் எண்ட்ல அவளோட வீட்டுக்குப் போயிடறார்..”
“ஓ.. தட்ஸ் குட் ட்டு நோ.. நாங்க வர்றோம்ப்பா.. வீ டோண்ட் வாண்ட் ட்டு க்கீப் யூ வெயிட்டிங்.. ப்ளீஸ் ட்டேக் கேர்.. பை..”
அண்ணாமலையின் பாத யாத்திரை போன்ற அன்றைய தலைப்புச் செய்திகளை அலசியபடி, இளஞ்சூடான காலை வெயிலில் கரைந்து அவர்கள் தங்களது இல்லங்களை நோக்கிக் காணாமற் போயினர்.
காலை டிஃபனுக்கு சட்னி அரைக்க அத்தியாவசியமான சாமான்களையும், ஒரு பாக்கெட் எக்ஸ்டரா பாலையும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பிய நான், அவர்களது விசாரிப்பை அப்பாவிடம் பகிர்ந்து கொண்ட பின்,
“ஏம்ப்பா, காசி யாத்திரை போறவங்க, அவங்களுக்குப் பிடிச்ச ஏதாவது ஒரு ஐட்டத்தை அங்கேயே விட்டுவிட்டு வரணுமாமே.. நீயும் அம்மாவும் போனப்போ எதை விட்டுட்டு வந்தீங்க?”
“ஆமாம்ப்பா.. நான் மரவள்ளிக் கிழங்கை விட்டுட்டேன்.. அம்மா வெண்டைக்காயை விட்டுட்டா..”
அவை அவர்களது ஃபேவரிட் காய்கள்தான் என்பது எனக்குத் தெரியும். ஸோ, ச்சீட்டிங் ஏதும் செய்யவில்லை. வெரி ட்டிப்பிக்கல் ஆஃப் தெம். பொய், புரட்டு, கோள் சொல்வது மாதிரியான சாமான்ய மனிதர்களின் சாமர்த்தியங்கள் ஏதும் அறியாமல், இருப்பதைக் கொண்டு ஆனந்தமாக வாழ்ந்த ஆதர்ச தம்பதிகள் என் பெற்றோர்.
“அது சரிப்பா.. வாட் இஸ் த லாஜிக் பிஹைண்ட் திஸ் திங்னு உனக்குத் தெரியுமோ?”
“அது ஏதோ ஒரு ஸ்பிரிச்சுவல் பிராஸஸ்ப்பா.. அங்க போகிற எல்லாரும் அதை ஃபாலோ பண்றோமே தவிர, ஏன்.. எதுக்குன்னு.. யாரும் பொதுவா ஆராய்ச்சி பண்றதில்லை.. உங்க அம்மாவைக் கேட்டா அதுக்கும் ஏதாவது விளக்கம் கொடுப்பா..” என்றவரை, அம்மா பற்றிய நினைவுகளை ஆசை போடட்டும் என்று தனியே விட்டு, ந்யூஸ்பேப்பரை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்குப் போனேன்.
மொ மாடியில் பக்கத்துக்கு ஃப்ளாட் ஷங்கரநாராயணன் மாமா துணி உலர்த்திக் கொண்டிருந்தார். அப்பா, அம்மாவின் நீண்ட கால நெய்பர் + ஆப்த நண்பரான அவர், கிட்டத்தட்ட எங்களுடைய குடும்ப உறுப்பினர் மாதிரி. சங்கர மாமா என்றுதான் அவரை நாங்கள் கூப்பிடுவோம். அம்மாவின் அபர கர்மாவின் போது, கூடவே இருந்து அப்பாவுக்கும் எங்களுக்கும் உதவியவர். என்னைப் பார்த்து,
“என்னடா ரகு.. அப்பா என்ன பண்ணிண்டிருக்கார்.. அண்ட் ஹௌ ஆர் யூ டூயிங்? எப்போ வந்தே நீ.?”
ஒரே கேள்வியில் பல துணைக் கேள்விகளைக் கோர்த்துக் கேட்பது சங்கர மாமாவின் பாணி. கேள்வியின் நாயகனாக இருந்து, எக்கச்சக்க இன்ஃபர்மேஷனை சேகரித்து வைத்திருப்பார். ச்சாட் ஜீப்பீட்டீ மாதிரி ஏஐ துணையின்றி, தன்னம்பிக்கையுடன் என்ஐ (நேச்சுரல் இன்ட்டலிஜென்ஸ்) பயன்படுத்துகிற அரிதான சிலருள் ஒருவர்.
“நேத்திக்கு வந்தேன் மாமா.. நாளைக்குத்தான் அம்மாவுக்கு மாசிகம், ஸோதகும்பம். நாளைக்கு நைட்டே ரிட்டர்ன்.. அப்பா ஸீம்ஸ் ட்டு பீ டூயிங் ஃபைன்.. அதான் நீங்க, ரமா எல்லாம் பக்கத்துலதானே இருக்கீங்க.. அதனாலதான் நாங்கள்லாம் அங்க நிம்மதியா இருக்கோம்..”
மாமா துணி உலர்த்தலைத் தொடர்ந்தார். மொ மாடியில் தொட்டியில் இருந்த செடிகள், உலா வரும் புறாக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வது சங்கர மாமாதான். பிற உயிர்களுக்கு உதவுவது என்பது அவரது நேச்சுரல் வே ஆஃப் லிவிங் போலிருக்கிறது.
“நாளைக்கு வரேன் நான். கோபி வாத்தியார் எத்தனை மணிக்கு வர்றேன்னு சொல்லியிருக்கார்?”
“பத்தரை மணிக்கு மாமா..”
சங்கர மாமா பல்துறை வித்தகர். எந்த இடத்தில், யாரிடமும், எதைப் பற்றி வேண்டுமானாலும் விலாவாரியாகப் பேசக்கூடிய திறமை உள்ளவர். அஸோசியேஷன் மீட்டிங்கில் பை லாவை மேற்கோள் காட்டி பஞ்சாயத்து பிரச்சினையைத் தீர்ப்பதிலிருந்து, அக்கம்பக்க உற்றார், உறவினர், நண்பர்கள் பலருக்கும், எல்லா விதமான குழப்பங்களுக்கும், ‘யாமிருக்க பயமேன்’ என்று உடனடி நிவாரணம் அளிப்பவர் மாமாதான் என்பது என் நினைவுக்கு வர, காசிக்குப் போகின்ற யாத்திரீகர்கள் எதையாவது விட்டுவிட்டு வருகின்ற மேட்டரை அவரிடமே கேட்டுவிட முடிவு செய்தேன். கேட்டேன்.
சங்கர மாமா அட்டகாசமாக சிரித்தார். அவர் போட்ட தானியத்தைக் கொதிக்கொண்டிருந்த புறாக்கள் சற்றே திடுக்கிட்டு, பிறகு ‘அட நம்மாளுதான் சிரிக்கறாரா..’ என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு, கொத்தலைத் தொடர்ந்தன. நான் மையமாக முழித்தேன்.
“காசிக்குப் போறவா விட்டுட்டு வர வேண்டியது தன்னை. அதாவது ‘நான் இன்னார்’ என்ற தனிப்பட்ட அடையாளத்திற்கு ஆதாரமான அகந்தை / ஆணவத்தை. பேஸிக்கலி அங்க யாத்திரை போறவா ஈகோவை விட்டுட்டு வந்தால், அவங்களுக்குள்ள உருப்படியா ஏதாவது ச்சேஞ்ஜ் நடக்க வாய்ப்பிருக்கு. இட்ஸ் கொயட் இம்ப்பார்ட்டண்ட் ஃபர் அவர் ஸால்வேஷன்.”
“அப்போ இந்த காயை.. பழத்தை.. ஸ்வீட்டை.. விட்டுட்டு வர்றதெல்லாம் வெறும் ஹம்பக்கா மாமா.?”
“நோ.. நோ.. இட்ஸ் எ சிம்ப்பிள் யட் எஃபக்ட்டிவ் வே ட்டு ரிமைண்ட தி யாத்ரி அபௌட் தி இம்ப்பார்ட்டன்ஸ் ஆஃப் லெட்டிங் கோ.. காய், பழம், இல்லைன்னா உனக்கு ரொம்ப பிடிச்ச ஸோன்பப்டி மாதிரி ஸ்வீட் எதையாவது அங்கே விட்டுட்டு வர்றது, எவஞ்ச்சுவலி, ‘டாக்டர் ரகுராமன்.. பி ஹெச் டீ இன் நியூக்ளியர் ஃபிஸிக்ஸ்..’ங்கற மாதிரி ஸ்ட்ராங் பெர்ஸனல் ஐடென்ட்டிடியையும் கை விடணும்ங்கறதுக்கு ஒரு மெமரபிள் ரிமைண்டர் மாதிரி.. இட் வில் கெட் ரீ இன்ஃபோர்ஸ்ட்..” என்று என்னுடைய அடையாளத்தையே க்கோட் பண்ணி, காசி யாத்திரையில் எதையாவது கைவிடுவதற்கான காரணத்தை எளிமையாக விளக்கினார் சங்கர மாமா.
“அபியைக் கேட்டதா சொல்லுடா.. நாளைக்கு ஸெரிமோனிக்கு வேண்டியதெல்லாம் ஏற்கனவே பக்காவா அரேஞ்ச் பண்ணியிருப்பாளே.. தங்கமான பொண்ணு.. அலமு வாஸ் ஆல்வேஸ் வெரி ப்ரௌட் ஆஃப் போத் ஆஃப் யூ.. நான் நாளைக்கு வந்து அப்பாவைப் பாக்கறேன்.. ப்புவர் ச்சாப்..” என்று படியிறங்கிப் போனார்.
எதை, எதற்காக விட வேண்டும் என்பது புரியாமல், ஏற்கனவே பிடிக்காத புடலங்காய் / சீத்தாப்பழம் [அ] மருத்துவரால் தவிர்க்க வேண்டிய பட்டியலில் சேர்க்கப்பட்ட வஸ்துக்களான உருளைக்கிழங்கு / பலாப்பழம், இத்யாதியை காசியில் விட்டு விட்டதாக தம்பட்டம் அடித்துக் கொள்வது அபத்தம் என்பது எனக்குப் புரிந்தது.
நம்முடைய மூதாதையர்கள் விட்டுச் சென்றிருக்கும் தகவல்களோ, வழிமுறைகளோ அத்தனையும் அர்த்தமுள்ளவை. அனுபவபூர்வமாக அவர்களால் பரீட்சித்துப் பார்க்கப்பட்டு, பின்னர் செயல்முறையாக எதிர்கால தலைமுறையின் நலனுக்காக வழங்கப்பட்டவை.. என்று அம்மா அடிக்கடி சொல்வாள். தான் செய்யும் பூஜை மற்றும் விரதங்கள் எதற்காக என்று பொறுமையாக விளக்கவும் செய்வாள்.
‘அன்னவர்க்கே சரண் நாங்களே’ என்று இறைவனடி சேர்ந்து, இம்மை, மறுமை இல்லாத பேரானந்த நிலையான முக்தியை அடைவதற்கு, ஈகோவின் உடும்புப் பிடியைக் கைவிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை அனுபவபூர்வமாக அறிந்த நம்முடைய முன்னோர், அதை எப்படியெல்லாம் தினசரி வாழ்க்கை செயல்பாடுகளிலேயே எம்பெட் செய்து, நமக்கு எளிமையாக வழிகாட்டி இருக்கிறார்கள் என்று ஆச்சரியப்பட்டபடி, டைம்ஸ் ஆஃப் இந்தியாவைப் புரட்டினேன். ‘காசி விஸ்வநாத் தாம்’ காரிடார் முழுப்பக்க விளம்பரம் அதில் பளிச்சிட்டது!
எபிலாக்:
முக்தியை மட்டுமே மனிதப் பிறவியின் பிரதான குறிக்கோளாகக் கொண்ட தொன்மையான இக்கலாச்சாரத்தில், அதை அனைவரும் அடைவதற்கான வழிமுறைகளை நமது மூதாதையர் எளிமையாக வழங்கி இருக்கின்றனர். அத்தகைய வழிமுறைகளைப் பற்றிய தெளிவுடையோரின் எண்ணிக்கை தற்காலத்தில் குறுகி விட்டதால், அவை பற்றிய புரிதலின்றி, வெறும் செயல் அளவில் – காசியில் ஏதாவது காய்/பழத்தை விட்டு விடுகின்ற மாதிரி – அவற்றைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றி, பிறவிப்பயனுக்கான செயல்களை நம்மில் பெரும்பாலானோர் மறந்து விட்டோம்.
பிரபல திருத்தலங்களில் முடியிறக்குவது; திருத்தலங்களுக்கு யாத்திரை செல்வது; சபரிமலை, திருக்கயிலாயம், திருப்பதி, பழனி, கேதார்நாத் போன்ற தலங்களில் மலையேற்றம்; ராமேஸ்வரம் போன்ற தீர்த்த ஸ்தலங்களில் முழுகி எழுதல்; அன்னதானம்; பசுக்கள், நாய்கள், காக்கை போன்ற பிராணிகளுக்கு உணவளித்தல்; திருவண்ணாமலை போன்ற தலங்களில் கிரி வலம்; திருக்கோயில் திருப்பணிக்கு நன்கொடை வழங்குதல்; திருக்கோயில் வளாகத்தைத் தூய்மைப்படுத்தும் உழவாரப் பணி; வீட்டு வாயிலைத் தூய்மைப்படுத்தி அரிசி மாவினால் கோலமிடுதல்; தீபம், தூபமேற்றி, மலர்கள் சாற்றி, உலர் திராட்சை / கற்கண்டு போன்ற எளிய நிவேதனம் அர்ப்பணித்து, கற்பூர ஆரத்தி காட்டித் தொழுது வணங்கும் தினசரி இறை வழிபாடு…
…போன்ற கலாச்சார அம்சங்கள் அனைத்துமே, ‘நான் இன்னார்’ என்கிற தனிப்பட்ட அடையாளத்தை, அஃதாவது தன்னை விடுதலுக்கு உதவும் செயல்முறைகளே. அவற்றை முறைப்படி அறிந்து, பின்பற்றி + பயன்படுத்தி, விடாது முயன்று அகந்தையை / ஈகோவைக் கைவிட்டால்தான், ‘நான் யார்’ என்ற தெளிவு கிட்டி, பிறந்திறவாப் பெருநிலை அடையும் குறிக்கோளை நோக்கி நம்மால் நகரவியலும் – இப்பிறவியிலோ.. இதற்கடுத்த வேறொரு பிறவியிலோ.!
திருச்சிற்றம்பலம். 🙌🏼👣🪷😇🙏🏼
~ஸ்வாமி