பெற்ற வெற்றிகளில் பெருமை தரும் வெற்றி எது!

எது வெற்றி என்பது நாம் வாழும் காலம், சூழல், நிலை, தன்மை போன்றவற்றைப் பொறுத்து மாறுபடும். வெற்றி, தோல்வி என்பதை பைனரியாகவோ (இருமை), எதிர்மறையாகவோ பார்ப்பது மிகவும் மேம்போக்கான கண்ணோட்டம். இப்பதிவைப் பொறுமையாகப் படிப்போரில் சிலரேனும் இறுதியில், ‘ஹ்ம்ம்ம், தட் வாஸ் இண்டீட் அன் இன்ட்டரஸ்ட்டிங் இன்ஸைட்,’ என்று ஆமோதிக்கலாம்!

மிக இளம் வயதில், அதாவது பால பருவத்தில், போட்டிகளில் (பேச்சு, ஓவியம், இசை, விளையாட்டு, இத்யாதி…) ஏதாவது ஒரு பரிசு கிடைத்தாலே மிகப்பெரிய வெற்றி பெற்றதாகத் தோன்றும். அவ்வாறுதான் பெற்றோரும், மற்றோரும் கூறி நம்மை ஊக்கப்படுத்துவர்.

வளர வளர, நம்மைப்போன்றோ, நம்மை விடச் சிறப்பாகவோ, திறன் மற்றும் திறமை உடையோர் உலகில் பலர் உளர் என்பது தெரியவர, போட்டியிட்டு முதற்பரிசு [அ] தரவரிசையில் முதலிடம் பெறுவதே வெற்றி என்று தோன்றும். ‘முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்‘ என்பதெல்லாம் இடம், பொருள், ஏவல், செல்வம், செல்வாக்கு போன்ற பலவற்றைச் சார்ந்தது என்பது இந்நிலையில்தான் புரியத் துவங்கும்.

இது அடியேன் வாழ்விலும் எல்லோரையும் போலத்தான் இருந்தது. பள்ளியிலும், கல்லாரியிலும் பல போட்டிகள்.. பல பரிசுகள்.. பாராட்டுக்கள்.. ஜஸ்ட் மிஸ்டு ரக தோல்விகளும்தான்…

பள்ளிப்பருவத்தில் தீவிரமான விளையாட்டு ஆர்வம் கொண்டவனாக, பல விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளேன். பத்தாம் வகுப்பு படிக்கும்போது, தடகள விளையாட்டு தொடர்பான ஒரு விபத்தில், இடது கால் செயலிழந்து விட்டது. காலாண்டுத் தேர்வு எழுதும் சமயத்தில் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை. லிட்டரலாகப் படுத்த படுக்கை. இரண்டு அறுவை சிகிச்சைகள் நடந்து, நான் மீண்டும் எழுந்து நடப்பதற்குப் பல மாதங்கள் ஆகிவிட்டன. ஐவருள் மூத்த பிள்ளைக்கு இப்படி ஆனதில், என் பெற்றோர் பதறிப் போயினர் (‘பிள்ளை மீண்டும் நடப்பானா.. மாட்டானா.? முருகா.. தாயே மீனாக்ஷி.. எப்படியாவது மறுபடி நடக்க வைத்து விடுங்கள்..!’).

கல்வி, கலை, விளையாட்டு என்று பல துறைகளில் ஆர்வமும், திறமையும் உள்ள ஒரு இளைஞ/ஞிக்கு, இம்மாதிரியான  எதிர்பாராத, அதிர்ச்சி அளிக்கும் நிகழ்வு மிகப்பெரிய பின்னடைவாக  அமைந்து விடக்கூடும். இறையருளால், இச்சமயத்தில் என்னை நோக விடாமல், ஊக்குவித்தோரே அதிகம். குறிப்பாக என் குடும்பத்தினர் மற்றும் உறவினர் சிலர். மெல்ல எழுந்து, நடந்து, மீண்டும் கல்வியைத் தொடரத் தயாரானபோது, அரசு அலுவலரான என் தந்தை வேறு ஊருக்கு டிரான்ஸ்ஃபர்  செய்யப்பட, அதுவரை நடந்தவற்றை அவ்வூரிலேயே விட்டுவிட்டு நகர்ந்தேன்.

அடுத்த ஆண்டு, வேறு ஊரில், புதிய பள்ளியில், அதுவரை அறியாத சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில், பத்தாம் வகுப்பை மீண்டும் படித்தபோது, எனக்கு அமைந்த ஆசிரியர்களைப் போல், இதுவரை என் வாழ்நாளில் யாரையும் சந்திக்கவில்லை எனலாம். நடந்தால் போதும் என்ற நிலையில் (சைக்கிளும் ஓட்டத் துவங்கிவிட்டேன் மறுபடியும் – குடிநீரைக் குடத்தில் பிடித்து, எடுத்து வரவேண்டிய ஊர் என்பதால் நோ ச்சாய்ஸ்), விளையாட்டுக்கு முற்றும் போட்டுவிட்டு (பாரத மாதா தனக்கு அம்மாதிரி ஒரு ஒலிம்பிக் லெவல் ஓட்டப்பந்தய வீர மகன் இருப்பதை அறிந்ததாகத் தகவலில்லை), படிப்பில் முழு கவனமும் திரும்ப, வகுப்பெடுத்த ஒவ்வொரு ஆசிரியரும் என்னை “நீ கண்டிப்பாக மாநில அளவில் ரேங்க் எடுப்பாய்,” என்று நேரடியாகக் கூறி ஊக்கப்படுத்தி, அவ்வருடம் மாநிலத் தரவரிசை (state rank) பட்டியலில் இடம்பெறச் செய்தே விட்டனர். இப்பிறவியில் அது நிச்சயம் ஒரு மைல்கல் எனினும், அதுவும் கடந்து போனது.

பிளஸ் ட்டூவில் அதே அளவு பெர்ஃபார்ம் பண்ண முடியாமல் போக (மேல்நிலைப்பள்ளி காலத்தில் பொதுவாகவே மாணவர்/விகளுக்கு கவனச்சிதறலுக்கான வாய்ப்புகள் அதிகம் – இது தற்காலத்தில் சமூக ஊடகங்கள் + செயலிகள் தயவில் ரொம்பவே ஆம்ப்ளிஃபை ஆகிவிட்டது), சென்னை, கோவை பெருநகர்க் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல், சிவகாசி அருகிலுள்ள கல்லூரியில்தான் பொறியியல் படிக்க வேண்டிதாகிவிட்டது (நோ ரெக்ரெட்ஸ் தோ – மிகத் தரமான கல்லூரிதான்).

பின்னர் கல்லூரிக் காலத்தில், விகடனில் முதல் சிறுகதை வெளிவந்தது ஒரு மகத்தான மைல்கல். ஒருபக்கக் கதைதான் என்றாலும், கதையின் முடிவை மட்டும் ஆசிரியர் மாற்றிவிட்டாலும், பதிப்பில் வெளிவந்தது வந்ததுதானே. ஏதோ சன்மானம் கூட மணி ஆர்டரில் வந்ததென்று ஞாபகம். அதே காலத்தில் ஆதர்ச எழுத்தாளர் சுஜாதாவை நேரில் சந்தித்து அளவளாவும் வாய்ப்பும் கிட்டியது. என் போன்ற கத்துக்குட்டி எழுத்தாளருக்கு இதுவே புக்கர் பரிசு பெற்றதற்கு ஈடு!

https://tinyurl.com/QV-SujathaDarshan

ஆனால், அதன்பின்னர் எழுத்துலகில் பரிமளிக்க என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டுவோர் யாருமின்றி, ஏதாவது நோட்டுப் புத்தகம் [அ] பேப்பர்களில் தார்மீகக் கோபம், காதல், இத்யாதியைப் பற்றிக் கவிதைகள் அவ்வப்போது எழுதியதோடு எமது எழுத்துப்பணி ப்பாஸ் ஆகிவிட, தமிழ் கூறும் நல்லுலகம் அடுத்த தலைமுறை சுஜாதாவை (ஆஹா, என்ன ஒரு நெனப்பு அண்ணனுக்கு!) இழந்தது.

அடுத்த படித்து முடித்து, பட்டம் வாங்கி (பொறியியல் பட்டப் படிப்பில் பல்கலைக்கழக ரேங்க் வாங்கியதும் நடந்தது – ஆனால் அப்போது நான் வருந்தியதென்னவோ, ‘பெஸ்ட் ஒளட்கோயிங்க் ஸ்டூடெண்ட்’ பட்டத்தைத் தவற விட்டதைப் பற்றித்தான்), வேலை தேடி, சொந்த ஊரிலேயே முதல் வேலை வாய்ப்பைப் பெற்று (படிப்பினால் அல்ல, பேச்சுத் திறமையால்!), உழைத்து, திருமணம் புரிந்து, வேறு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பெற்று, சென்னைக்கு ஜாகை மாற்றி, பிள்ளை பெற்று, வெளிநாட்டுக்குப் போய் வாழ்ந்து திரும்ப வந்து, கார் வாங்கி, வீடு வாங்கி, ஈ.எம்.ஐ கட்டி, மேலும் உழைத்து, பதவி உயர்வுகள் பெற்று, மேலும் இன்க்கம் டாக்ஸ் கட்டி… இவ்வாறு ஒரு சாதாரண நகர்வாழ் மதியமராகத்தான் என் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.

இடையிடையே, பல தளங்களில், களங்களில் ஏதேதோ போட்டிகள்.. என்னென்னவோ சவால்கள்.. எத்தனையோ சாதனைகள்.. வெற்றிகள். அதையெல்லாம் லாங் லிஸ்ட் போட்டால் அபத்தமாக இருக்கும்.

இவையெல்லாம் ஒரு நிலையில் அலுத்துப்போய், 45லேயே (ஒரிஜினல் திட்டம் 50ல் – இதை என்னுடைய நிதி ஆலோசகர் இப்போதும் நினைவு கூர்ந்து குறிப்பிடுவார்) பிழைப்புத் தளத்திற்கு ச்சாவ் சொல்லி, விருப்ப ஓய்வு பெற்று விலகிவிட்டேன். திட்டமிட்ட ஓய்வு பெரிய அளவில் தடுமாற்றமின்றி ஓடிக்கொண்டிருக்கிறது – இதுவரையில். பெரும் சொத்தோ, பின்புலமோ இல்லாமல், சுய உழைப்பால் வாழ்வில் உயர்ந்த ஒரு சாமான்யனுக்கு, 9-x ஓய்வற்ற பிழைத்தலிலிருந்து, நாற்பதுகளில் ஈட்டிய இத்தகைய விடுதலை பெரும் வெற்றியே என்பதைக் கூறத் தேவையில்லை. https://bit.ly/3zxClfe

பிள்ளை/கள் பிறந்து, ஆரம்ப கால “அப்படியே எ/உன்ன உரிச்சு வெச்ச மாதிரி இருக்காப்ல இல்ல” (உண்மையில் பிறந்த குழந்தைகள் எல்லோரும், உலக அளவில் ஒரே மாதிரிதான் இருப்பார்கள் – நிறம் மற்றும் முடி மட்டும் வேண்டுமானால் வேறுபடலாம்) கொஞ்சல்; ‘ஓஎம்ஜி’ கொண்டாட்டம்; நாக்ட்டர்னல் நாலு மாதக் குழந்தையால் தூக்கம் கெட்டு தாவு தீர்ந்து போய் நடக்கும் சண்டை; “ஏன், நீங்க டயப்பரை மாத்தினா தேஞ்சு போயிருவீங்களோ..” சச்சரவு எல்லாம் நடந்து முடிந்தபிறகு, குழந்தை/கள் ஏதேனும் பயிலத்துவங்கும் நிலையை அடைந்தவுடன், நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றி பெறுவது என்பதிலிருந்து, நமது குழந்தையின் வாழ்க்கை, அவரது வெற்றி என்று கவனம் தானாகவே திரும்பிவிடும். பெரும்பாலான பெற்றோர்களது நிலை இதுவே – குறிப்பாக பாரம்பரிய கலாச்சாரத்தில் வளர்ந்த பாரத தேசத்தவருள் (பொதுவாக மேலை நாடுகளில் தனிமனித / தன்னுடைய வெற்றிதான் இறுதிவரை முக்கியம் – பெரும்பாலானோருக்கு).

எனவே, இதுபற்றி வள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே டீவீட்டி விட்டார் என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்.‘ (குறள் #69)

பிள்ளையை/களைப் பெற்ற தாயைப் பொறுத்த அளவில், தன்னுடைய குழந்தை (இருபாலரும்தான்) சான்றோன் (திறன் மிகுந்தவன்/ள்) எனப் பிறரால் அங்கீகரிக்கப்படுவதுதான் மிகப்பெரிய வெற்றி. இவ்வினாவிற்கு ஏற்கனவே விடையளித்த பலர் (தாய், தகப்பன் இருவரும்) இதைக் குறிப்பிட்டிருப்பதே, வள்ளுவர் வாய்மொழிக்குச் சான்று.

எனில் தந்தை எதனை வெற்றியாகக் கருதுவார்? அதற்கும் வள்ளுவரே விடையளிக்கிறார் – ஆனால் ஒரு சின்ன ட்விஸ்ட்டோடு. முதலில் தந்தை பிள்ளைக்கு என்ன செய்யவேண்டும் என்று ‘கடமை’ பற்றிக் குறிப்பிடுகிறார். பிள்ளையை/களை வளர்த்து ஆளாக்குவது பெரும்பாலும் தாய்தான் என்பதால், அவருக்குத் தனியாக கடமை எதுவும் குறிப்பிடப்படவில்லை போலும்.

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்.‘ (குறள் #67)

தன் பிள்ளையை (இங்கு பிள்ளை என்று குறிப்பிடுவது பொதுவாக குழந்தையை என்றே கொள்க; பையன், பெண் என்ற பாகுபாடு அர்த்தமற்றது – குறிப்பாகத் தற்காலத்தில்) அறிவுடையோர் (திறனுடையோர் என்றும் கொள்ளலாம்) உள்ள அவையில், முதன்மையானவராக ஆக்குவது தந்தையின் கடமை என்கிறார்.

ஆக, எந்தவொரு தந்தைக்கும், தன்னுடைய குழந்தையை(களை)த் தன்னைவிடச் சிறப்பான நிலைக்கு உயர்த்துவதற்குத் தேவையான அனைத்தையும் – கல்வி, கலை, விளையாட்டு போன்று எத்துறையாக இருந்தாலும் – செய்வதுதான் தலையாய கடமை என்கிறார் வள்ளுவர்.

சரி, கடமை புரிகின்றது. ஆனால், ‘தந்தை மகற்காற்றும் கடமை‘ என்று கூறாமல், ‘நன்றி‘ என ஏன் கூறுகிறார்? இதற்கான விடையை அறிய, அதே அதிகாரத்தில் சற்று முன்பாக இருக்கும் குறளுக்குப் போக வேண்டும்.

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

மக்கட்பேறு அல்ல பிற.‘ (குறள் #61)

வாழ்வில் அறியவேண்டியவற்றை அறியக்கூடிய நன்மக்களைப் பெறுவதை விட வேறு பெரிய பேறு ஏதுமில்லை (பெற்றோருக்கு).

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்.‘ (குறள் #62)

(சமூகத்தில் / உலகில்)பழி ஏதும் ஏற்படாத வகையில் வாழக்கூடிய நற்பண்புகளை உடைய பிள்ளைகளைப் பெற்ற தாய்/தந்தையரை, ஏழு பிறப்பிலும் தீமை அண்டாது.

ஆக, நல்லறிவும், நற்பண்பும் கொண்ட பிள்ளைகளைப் பெறுவதே பெற்றோருக்குப் பெரிய பயன்தான் என்கிறார் வள்ளுவர். அத்தகைய பிள்ளைப்பேறானது, பரஸ்பர நிதியில் (mutual fund) சேமித்த செல்வம்போல் தழைத்து வளர்ந்து, (இறுதிக்காலம் போன்ற) தக்க சமயத்தில் பெற்றோருக்குக் கைகொடுக்கும் என்பது திண்ணம். 

சரி, இவ்வாறு பிள்ளைகளைச் சிறப்பாக, சான்றோராக, அவையத்தில் முந்தியிருப்பச் செய்வதால் பெற்றோருக்கு வேறு பலன் ஏதேனும் கிட்டுமா?

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது.‘ (குறள் #68)

நம்முடைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகளாக, திறன் மிக்கவர்களாக ஆவதால், நமக்கு  மட்டும் நன்மை / பெருமை இல்லையாம். அத்தகையோரின் உயர்வு, உலகிற்கும், உலகிலுள்ள உயிர்கள் அனைத்திற்கும் இனிமை (பயன்) தருவதாம். இதைவிடப் பெரிய வெற்றி என்ன வேண்டும் பெற்றோருக்கு!

பை தி வே, அம்மாதிரி பிள்ளைகளின் வெற்றியை, உயர்வை முதன்மைப்படுத்திச் செயல்படும் தந்தைகளுக்கு (அட, தாய்மாருக்கும்தாங்க) அப்பிள்ளைகள் செய்யக்கூடிய கைம்மாறு என்னவாக இருக்கும் என்பதைக் கூறிவிட்டுத்தான், வள்ளுவர் ‘மக்கட்பேறு’ (பிள்ளை / குழந்தைப்பேறு) என்ற அதிகாரத்தை நிறைவு செய்கிறார்.

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்.‘ (குறள் #70)

‘இந்த மாதிரி ஒரு பிள்ளையைப் (குழந்தையை) பெற, இவரது தந்தை (+ தாய் – goes without saying) என்ன தவம் செய்தாரோ,’ என்று காண்போரை வியக்க வைப்பதுதான், நல்லறிவும், நற்பண்பும் உடையவனா/ளாகத் தன்னை வளர்த்த பெற்றோருக்கு அக்குழந்தை செய்யும் உதவியாம் (கடமை / கைம்மாறு).

அடியேனும், எனது வாழ்க்கைத் துணைவியும், எங்களது ஒரே பிள்ளையை, வள்ளுவர் வாய்மொழிப்படியே வளர்த்து ஆளாக்கியுள்ளோம் என்று உறுதியாக நம்புகிறோம். திருவருளும், குருவருளும் இதற்கு வழிகாட்டின என்பது எமது நம்பிக்கை. அவரது குறிக்கோளை எட்டி, வாழ்வில் பல வெற்றிகளை அவர் அடைவார் என்பது சர்வ நிச்சயம். அதற்கான கைம்மாறு எதுவும் அவர் செய்யத் தேவையில்லை என்கிற தெளிவு எங்களுக்கு இருந்தாலும் (இதை அவரிடமே நேரடியாகக் கூறியும் விட்டேன்!), செய்யத் தயங்கவோ, தவறவோ மாட்டார் என்பதில் எங்களுக்கு எவ்வித ஐயமுமில்லை.https://qr.ae/pGZipe

இவ்வகையில் ஏற்கனவே செயல்பட்ட/படும் பெற்றோருக்கு நமது வந்தனங்கள். இனி அவ்வாறு செயல்பட விழைவோருக்கு நம் வாழ்த்துக்கள்!

கு: 90களில் கைவிட்ட எழுத்துத் திறனை, ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்குப் பின்னர், வலைப்பதிவு (blog) எழுதுவதன் மூலம் மறுபடி ஆக்சிஜன் கொடுத்து உயிர்ப்பித்தேன். நூற்றுக்கணக்கான பதிவுகளுக்குப் பின்னர், கடந்த சில  ஆண்டுகளாகத்தான், என்னுடைய எழுத்தை விரும்பி வரவேற்றுப் பாராட்டும் நல்வாசகர்களைக் கோராவில் கண்டுகொண்டேன். களிப்புற்றேன். தற்போது ‘வெற்றி’ பெறும் நோக்கமெல்லாம் ஏதுமில்லை என்பதால், தெரிந்த + அறிந்ததை எழுதுதிப் பகிர்வதே ஆனந்தம் அளிக்கின்றது. அதுவே போதுமானது.

பி.கு: ஆன்மீகத் தளத்தில் உலவத் துவங்கி, குருவருட் கருணை மழையில் நனைந்த பின்னர், வெற்றி/தோல்வி ஆகிய இரண்டுமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்தான் என்பது தெளிவாகிவிட, போட்டி, பொறாமை, கர்வம், பெருமிதம் போன்றவற்றுக்கு விடைகொடுத்து அனுப்பியாகிவிட்டது. ஆகவே, இவ்விடைக்குப் பெருத்த ஆதரவு கிட்டினாலும், வெறும் நாலைந்து பேர் மட்டுமே ஆதரவு வாக்கைச் சொடுக்கினாலும், நாம் இரண்டையும் சமமாகவே  பாவிப்போம்; இயல்பாகவே ஏற்றுக்கொள்வோம்!

~ஸ்வாமி | ‘@PrakashSwamy

பிள்ளைகளைப் பற்றிப் பெற்றோர் காணும் கனவு!

உங்கள் பிள்ளைகளைப் பற்றி என்ன கனவு காண்கிறீர்கள்?” என்ற வினாவிற்கு ஸ்வாமி அளித்த Quoraவிடை ~ https://qr.ae/pGZipe

முதலில் ‘பிள்ளைகள்.’ நான் குழந்தையாக இருந்த காலத்திலேயே பல பிள்ளைகள் உள்ள குடும்பங்கள் விண்ட்டேஜ் வஸ்துவாகத் துவங்கிவிட்டன. என் பெற்றோருக்கு ஐந்து பிள்ளைகள். ஒற்றை வருவாயில் எப்படியோ சமாளித்து எங்களைப் படிக்க வைத்து, ‘இனி உழைத்துப் பிழைப்பது மகனே உன் சமர்த்து‘ என்று பை சொல்லி சிற்றூரிலிருந்து பெருநகரத்திற்கு எங்களை ஒவ்வொருவராக அனுப்பி விட்டனர். அவர்களுக்கு எமது வந்தனங்கள்.

எங்கள் தலைமுறையில் பலருக்கு இரண்டு குழந்தைகள். அதுவே எக்கனாமிக்கல் மற்றும் காம்ப்பெட்டிட்டிவ் கண்ணோட்டத்தில் அபத்தமாகத்தான் தோன்றுகிறது. இந்தத் தலைமுறையில் ஏதோ வேண்டுதல் மாதிரி இரண்டு பெற்றுக்கொள்வோரை
எந்த தைரியத்துலங்க ரெண்டு பிள்ளை பெத்துக்கறீங்க.. ப்ரீ-ஸ்கூல் அட்மிஷன் + ஃபீஸ் கட்டவே பேங்க் லோன் போட வேண்டியிருக்குமே – கார், ஹோம் லோன் ஈ.எம்.ஐ போக.. அதுக்கப்புறம் அவுங்க மினிமம் இன்னும் 15-16 வருஷம் படிச்சாகணும்.. அப்புறம் வேலைல செட்டில் ஆகிற வரைக்கும் உள்ள செலவு.. கல்யாணம்..‘ என்று கேட்கத் தோன்றுகிறது.
ஃபேமிலி கார்பன் ஃபுட்ப்ரிண்ட் டாக்ஸ்‘ என்று ஏதாவது புதிய வரி விதித்தால்தான் ஒன்றோடு நிறுத்துவார்கள் போலிருக்கிறது!

எனக்கு ஒரே பிள்ளை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் அடியேன் திட்டமிட்டதே அவ்வளவுதான். ‘ஒருவேளை ட்வின்ஸ் பிறந்தால்!‘ என்ற ஆர்வத்தில், ஆண்-ஆண் மற்றும் பெண்-ஆண் காம்பினேஷனுக்குப் பெயர்களை மட்டும் தேர்ந்தெடுத்து வைத்திருத்தோம். அதற்குத் தேவை ஏற்படவில்லை.

ஒன்றுக்குமேல் பெற்றுக் கொண்டு, பெற்ற அனைவரையும் ஆவரேஜ் ஆக வளர்க்க விரும்பாது, ஒன்றே ஒன்று பெற்று, அதை நன்றே வளர்க்க விரும்பினோம் – நிஜமாகவே (இதெல்லாம் சினிமா மாதிரி வெறும் டயலாக் இல்லைங்க.. அத்தனையும் புனிதநூல் மேல் சத்தியம் செய்யக்கூடிய உண்மை). பின்னர் அவருக்கு உடன்பிறவா சகோதரிகளாக நான்கு கால்களும், ஒரு வாலும் கொண்ட இருவர் பின்னர் குடும்பத்தின் அங்கத்தினராகினர் (அவரேதான் ஏதோ பொம்மை வாங்குகிற மாதிரி ஒரு ‘வெட்’டிடமிருந்து தூக்கிக் கொண்டு வந்து விட்டார் – வளர்ப்பதென்னமோ நாங்கதானே.. இன்றுவரை). இதுவே இன்றைய பொருளாதாரச் சூழலில் பெரிய குடும்பம்தான் – குறிப்பாக அடியேனைப் போன்ற மத்யமர்களுக்கு!

பெற்ற ஒற்றைப் பிள்ளையைப் பொறுத்தவரை எனக்கு ஒரே கனவுதான் இருந்தது – அவரை ரன்-ஆஃப்-த-மில் ரக ‘படி-வேலை பார்-கல்யாணம் செய்‘ டிரைடு & ட்டெஸ்டட் மாடலில் வளர்க்கக் கூடாது என்பதுதான் அக்கனவு.
பிராக்ட்டிகலாக இதை முயல – குறிப்பாக இந்த தேசத்தில் – ரொம்பவே தில் வேண்டும். கொஞ்சம் டிஸ்ப்போஸபிள் வருவாயும் வேண்டும். நல்ல வேளையாக, யாரிடமும் கையேந்தத் தேவையின்றி, இறையருளால் என்னிடம் இரண்டுமே இருந்தது.

படம்: பல்லாண்டுகளுக்கு முன்பு ஸ்வாமிலி – மேலைநாட்டில் சிலகாலம் ஐ.ட்டி பிழைப்பு நடத்திய காலத்தில் (இடம் – மின்னஸோட்டா மாகாணத்தின் புகழ்பெற்ற நார்த் ஷோரில், ஒரு ஏரிக்கரை)!

சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு இம்மாதிரி முடிவெடுத்து, வித்தியாசமான கனவை நனவாக்க முயன்ற எங்களை நெருங்கிய சுற்றத்தார் கூட
இவிங்களுக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு… புள்ளய ஒழுங்கா படிக்க வைக்காம, வெளையாட வெக்கப் போறாய்ங்களாமில்ல…‘ என்றுதான், முதல் அலையில் கோவிட்-19 தொற்றுநோயைத் தேடிப் பெற்ற பேஷண்ட் மாதிரி எங்களை துச்சமாகப் பார்த்தார்கள்.

சமூகத்தின் அங்கமாக வாழும் கட்டாயத்தில் இருப்போருக்கு இந்த மாதிரியான திங்க்-ஆப்போஸிட் ரக முயற்சிகள் ஒரு தவம் மாதிரி. கடுமையான முயற்சிகள் வேண்டும். எதிர்பார்த்த ரிஸல்ட் வருவதற்கு ரொம்ப காலம் ஆகும். ஏகப்பட்ட இடித்துரைத்தல், வஞ்சப் புகழ்ச்சி, கிண்டல், ரிஜெக்ஷன் ஆகியவற்றை எதிர்கொண்டாக வேண்டும். பிழைப்புத் தளத்தில் ட்டெம்ப்ளேட் வாழ்க்கை வாழ்வோருக்கு நம்முடைய கஷ்டம் புரியாது என்பதால், பெரிய அளவில் ஸப்போர்ட்டும் கிடைக்காது. பெற்றோர்களுக்கு மட்டுமல்லாது, குழந்தைக்கும் இது பெரிய சேலஞ்ஜ்தான். இயல்பான குழந்தைப் பருவத்தின் அம்சங்கள் பலவற்றைக் கைவிட / ஒத்திப்போட வேண்டியிருக்கும்.

பல விளையாட்டுகளுக்கான பயிற்சியில் அவரைச் சேர்த்து விட்டு, ஏதாவது க்ளிக் ஆகிறதா என்று பார்த்ததில் (‘என்னப்பா எப்பப் பார்த்தாலும் ச,ரி,க,மன்னு ஒரே மாதிரி பாடச் சொல்றாங்க’ என்று இசையைக் கைவிட்டு விட்டார் ஓரிரு நாட்களிலேயே), ஒன்றே ஒன்று மட்டும் ரெஸோனேட் ஆக, சரி இதுதான் இவரது களம் என்று முடிவெடுத்து கவனம் செலுத்தத் துவங்கினோம். விரைவிலேயே அந்த விளையாட்டு நடைபெறும் இடங்களில் எல்லாம் அவரது பெயர் பலருக்குப் பரிச்சயமானது. வரிசையாகப் பரிசுகளையும் வெல்லத் துவங்கினார். எங்களது வேகமும், செலவும், உழைப்பும் அதிகரிக்கத் துவங்கியது.

ஒரு கட்டத்தில், ‘படிப்புத்தான் முக்கியம்’ என்று பிரஷர் கொடுக்கத் துவங்கியதால், பள்ளியைக் கூட மாற்றினோம் – அவர்  விளையாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்று. இருந்தாலும் படிப்பும் இணை தண்டவாளம் போன்று தொடர்ந்தது. தற்காலத்தில் விளையாட்டு ஒரு வைய்யபிள் கெரியர் ஆப்ஷனாக ஏற்றுக்கொள்ளப் பட்டு விட்டது நம் தேசத்தில் கூட. ஆனாலும், அடிப்படையான கல்வி என்பது ரொம்பவே முக்கியம். ஏனெனில் விளையாட்டு – குறிப்பாக ஃபிஸிக்கல் வகை – சாஸ்வதமான ஒன்றல்ல. அதற்கு எக்ஸ்பயரி டேட் நிச்சயமாக உண்டு.

பல வருடங்கள் வெற்றிகரமாக இருகுதிரைச் சவாரி (படிப்பு + விளையாட்டு) செய்து, ஒரு வழியாக பிள்ளையார் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து (ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் சீட் கொடுத்தார்கள் – கொஞ்சம் டார்ச்சர் பண்ணிய பிறகுதான்) பொறியியல் பட்டமும் பெற்று, விளையாட்டிலும் உலகத் தரவரிசையில் இடம் பெறும் நிலைக்கு வெகு அருகில் வந்து விட்டார் – சுமார் ஒண்ணரை வருடங்களுக்கு முன்பாக.

வாழ்க்கையில் அக்கணம் ஒரு மிக முக்கியமான டர்னிங் பாய்ண்ட். நாங்கள் இருபது வருடக் கனவு மெய்ப்படப் போகின்றது என்ற பெருமிதத்தில் மிதந்தோம். அந்த க்ரூஷியல் நேரத்தில்தான் மனித இனத்தையே மண்டியிட வைத்த கோவிட்-19 பெருநோய்ப் பரவல் துவங்கியது. (இந்த இடத்தில் பயங்கரமான டெமாலிஷன் ரக ஓசையுடன், சோகமான பி.ஜி.எம். சேர்த்துக் கொள்ளவும்).

கோவிட்-19 பண்ணிய அட்டகாசத்தில், பயணம் என்பதே சாத்தியமில்லாமல் போனது. அதிலும் குறிப்பாக வெளிநாட்டுப் பயணத்திற்கு வாய்ப்பே இல்லை. அச்சமயத்தில் உலகத் தரத்திலான போட்டிகள் எதுவும், எங்கும் நிகழவில்லை. உலக அளவில் ஓப்பன் ரக போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறாமல், தரவரிசையில் உயரவும், டாப் லெவல் டைட்டிலைப் பெறவும் வாய்ப்பில்லை. பிள்ளை அவர்கள் உச்சத்தைத் தொடத் தயார் நிலையில் இருந்தாலும் (இதற்காக விலை உயர்ந்த ஹை.எண்ட் லேப்டாப்பை, கடைகள் அவ்வளவாகத் திறக்காத நிலையில், ஊரெல்லாம் தேடி அலைந்து வாங்கியது மற்றொரு பரபர நிஜக் கதை), எதுவுமே செய்ய இயலாத வகையில் எங்களது திட்டங்களெல்லாம் அப்படியே ‘டே ஆஃப்ட்டர் ட்டுமாரோ’ டிசாஸ்டர் பட ஸீன் போல ஃப்ரீஸ் ஆகி நின்றன.

ஏதோ வந்தோமா, போனோமா என்றில்லாமல் இந்த சாமர்த்திய வைரஸ் விதவிதமாக ம்யூட்டேட் ஆகிப் பரவிக்கொண்டிருக்க, தடுப்பூசி அதிவேகத்தில் உருவாக்கப்பட்டாலும் கூட உலக ஜனத்தொகை அனைத்திற்கும் அதைப் போடுவதில் உள்ள பிராக்ட்டிக்கல் பிரச்சினைகளாலும், இந்த நிலைமை மாறுவதற்கு வருடக்கணக்கில் ஆகிவிடும் என்று தெரிய வந்தபோது, தன் எதிர்காலத்தைப் பற்றித் தெளிவான ஒரு முடிவைப் எம் பிள்ளை எடுத்தார். ‘நான் விளையாட்டில் மேலும் சிறப்பாக உயரும் திட்டத்தை எல்லாம் அப்படியே ப்பாஸ் பண்ணிவிட்டு, பட்ட மேற்படிப்புக்கான முயற்சியில் இறங்கப் போகிறேன்‘ என்றார்.

இருபதாண்டுக் கனவு எங்கள் கண்முன்னே குழந்தைப் பருவத்தில் ரயிலிலும், காரிலும் ஊர் ஊராக தேசமெங்கும் சென்று விளையாடியதில் துவங்கி, வளர்ந்தபின்னர் உலகெங்கும் பறந்து செய்து விளையாடிய காலம் வரை ஃபாஸ்ட் ஃபார்வேர்டு ஆகி ஓடி, ‘என்னண்ணே, இப்படி லாஸ்ட் மைல் மட்டும்தான் பாக்கி இருக்கறப்ப, ஆர் யூ ரியலி கோயிங் ட்டு டிராப் த பால் நௌ,‘ என்று ஏளனமாய்க் கேள்வி கேட்டது. அந்தக் கணத்தில் உணர்ச்சிவசப்பட்டு ரியாக்ட் பண்ணாமல், சூழ்நிலைக்கேற்ற வகையில் ரெஸ்பான்ஸ் மட்டும் தர வைத்தது குருவருளே என்பது திண்ணம்.

இங்க பாருப்பா, உன்னை வித்தியாசமான வகையில் வளர்க்க நாங்கள் ஆசைப்பட்டது உண்மை. எப்படியோ எங்கள் ஆசையும், உன்னுடைய ஆர்வமும் ஒத்துப் போக, இரு துறைகளிலுமே நீ சிறப்பாக உயர்ந்தது பெரிய விஷயம். இனி உன் வாழ்க்கையில் என்ன செய்வது என்பது முற்றிலும் உன்னுடைய முடிவே. யூ ஆர் அன் அடல்ட் நௌ. நீ சம்பாதித்து எங்களுக்கு சோறு போட வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. என்னுடையது பிளாண்ட் ரிட்டயர்மண்ட்தான் என்பதால், எத்தனை காலம் ஆனாலும் நம் மூவருக்கும் இருக்க இடம், உடுக்க உடை, உண்ண உணவு, ப்ரீபெய்டு ரீசார்ஜ், பிராட்பேண்ட் மற்றும் ஸ்கூட்டர்+பைக்+காருக்கு பெட்ரோல், இன்ஷ்யூரன்ஸ் ஆகியவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன். உன் முயற்சி திருவினையாக எங்களால் இயன்ற உதவியை நாங்கள் நிச்சயமாகச் செய்வோம். பட் ஜஸ்ட் க்கீப் இன் மைண்ட் தட் மை ஃபைனான்ஷியல் ரிசோர்சஸ் ஆர் செர்ட்டன்லி னாட் அன்லிமிட்டட்‘ என்று கூறி, அவர் விருப்பப்படியே அடுத்த இன்னிங்ஸை ஆட அனுமதித்து விட்டோம்.

படிக்கும் வயதில் பல நாட்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்ல முடியாமல் எங்காவது ட்டோர்னமெண்ட் ஆடிக் கொண்டிருந்ததாலோ என்னவோ, வெளியே அதிகம் செல்ல முடியாத இப்போது, படிப்பின் மீது அதீத ஆர்வம் வந்து, மேற்படிப்புக்கான முயற்சிகள் அத்தனையையும் அவரே தீவிரமாக மேற்கொண்டிருக்கிறார். விரைவில் விரும்பிய இடத்தில், விரும்பிய பட்ட மேற்படிப்பைச் செவ்வனே மேற்கொண்டு, அதன்மூலம் சீரும் சிறப்புமாக வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வருவார் என்பதில் ஐயமில்லை. விளையாட்டின் மூலம் இடைவிடாமல் கூர் செய்யப்பட்ட திறன்களும், இள வயதிலேயே உலகம் சுற்றி வந்ததன் மூலம் கிட்டிய அனுபவமும், வாழ்வில் வெற்றிபெற அவருக்குக் கைகொடுக்கும் என்பது வெள்ளிடை மலை. குருவருளும், திருவருளும் அதற்குத் துணை நிற்கும்!

குழந்தை பெற்று வளர்ப்பது என்பது 21 வருட புராஜக்ட். அதற்குத் தேவையான கமிட்மெண்ட், டெடிகேஷன், ஆர்வம், ஊக்கம் இதெல்லாம் இல்லையென்றால், பிள்ளை பெற்றுக் கொள்ளாமல் சும்மா இரு. ஏற்கனவே பூமியில் மக்கட்தொகை ரொம்ப அதிகம் மற்றும் ரிசோர்சஸ் கம்மி என்பதால், மற்றுமொரு குழந்தையால் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருப்பது நல்லதுதான்.
ஒருவேளை உனக்குக் குழந்தை பிறந்து விட்டால் அல்லது ஏற்கனவே பிறந்திருந்தால் , தயவுசெய்து உன்னைப் போன்ற மற்றொரு முட்டாளை மறுபடியும் உருவாக்க முயலாதே. ஒரு செடியானது இயல்பாக வளர்வதற்கு தேவையானவற்றை மட்டும் நீ ஒரு தோட்டக்காரனைப் போல செய்தால் போதும். உரிய காலத்தில் அதுவாகவே வளர்ந்து, இயல்பாகவே பூத்துக் குலுங்கும்,’
என்று பிள்ளை வளர்ப்பு பற்றி என் குருநாதர் கூறுவதுண்டு. அது முற்றிலும் உண்மை என்பதை நாங்கள் அனுபவபூர்வமாக அறிந்துள்ளோம்.

நம்முடைய நிறைவேறாத கனவுகளை நனவாக்க, நம்முடைய குழந்தைகளைக் கருவியாகப் பயன்படுத்துவது என்பது முறையல்ல. தொழிலதிபர்கள், மருத்துவர்கள், வக்கீல்கள், நடிகர்கள், அரசியல்வியாதிகள் போன்றோர் லெகஸி என்ற ஃபஸாடுக்குப் பின்னர் ஒளிந்துள்ள சொத்துப் பாதுகாப்புக்காகத் தங்களது பிள்ளைகளைத் தங்களது துறையிலேயே கொண்டுவர பகீரதப் பிரயத்தனம் செய்வது நகைப்பிற்குரியது மட்டுமல்ல; கண்டனத்திற்குமுரியது. இதில் மருத்துவர்களைத் தவிர்த்து, மற்றோரால் உலகிற்குப் பெரிதாக பிரயோசனம் எதுவும் இருக்கப் போவதில்லை என்பது சொல்லித் தெரிய வேண்டியதா என்ன!

குழந்தைகளுக்கென்று இருக்கும் கனவுகள், ஆர்வங்கள், திறன்கள், அவை சார்ந்த திட்டங்கள் ஆகியவற்றை அவர்களுடன் சேர்ந்து ரிவியூ பண்ணி, இயன்ற உதவிகளை அளித்து, இலக்கை அடைய உதவுவதே பெற்றோரின் கடமை. ஈன்றபொழுதிற் பெரிதுவப்பதென்பது, எந்தத் துறையில் குழந்தை சிறப்பான நிலையை எட்டினாலும் பெற்றோரால் முடியும். ‘நான் கண்ட கனவை என் பிள்ளை/பெண் நனவாக்கும் போதுதான் பெருமிதம் கொள்வேன்,’ என்கிற மாதிரி பெற்றோரை, மார்ஸில் காலனி அமைக்கச் செல்லும் மஸ்க் அல்லது பேஸோசின் முதல் விண்கலத்தில், எப்படியாவது இலவச டிக்கெட் கொடுத்து பேக் பண்ணி மொத்தமாக அனுப்பி விட வேண்டும்.

மிகப்பெரும் செல்வந்தரான முகேஷ் அம்பானி கூட, தன் பிள்ளைகளை (அவரது தந்தை திருபாய் அம்பானி ஃபிரம்-த-ஸ்க்ராட்ச் உருவாக்கிய) பெட்ரோலியத் தொழில் தாண்டி, ஆன்லைன் ரீட்டெய்ல், டெலிக்காம் போன்ற டிஜிட்டல் யுக பிசினஸ்களைச் செய்ய ஊக்குவிப்பதோடல்லாமல், உடனிருந்து கைடு வேறு பண்ணுகிறார். அவரைப்போல நம்மால் கோடிக்கணக்கில் பிள்ளைகளின் கனவை நனவாக்கச் செலவிட முடியாவிட்டாலும், நம்மைவிட உயர்ந்த நிலையை நமது குழந்தை/கள் அடைய அவர்களை ஊக்குவிப்பதும், வழிகாட்டுவதும் நம்மால் இயன்றதே. ஒருவேளை அது சாத்தியமில்லை என்றால், சரியான வழிகாட்டியிடம் அவர்களை இணைத்து விட்டு, நாம் ஒரு பார்வையாளராக ஒதுங்கிக் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.

இந்த வாழ்நாளில் நாம் கற்ற+பெற்ற நம்முடைய வாழ்க்கை அனுபவம், நமது அவர்களுடைய ஆர்வத்துடன் இணைந்து மற்றும் இசைந்து செயல்பட்டால், ஒவ்வொரு குழந்தையுமே வாழ்வில் மலர்ந்து, நறுமணம் பரப்பக் கூடும். இதற்குத் தேவை தெளிவான திட்டமிடல் மற்றும் உறுதியான செயலாக்கம்தானே அன்றி, கனவு காணுதல் அல்ல!

~ஸ்வாமி | ‘@PrakashSwamy

யானுமிட்ட தீ மூள்க மூள்கவே ~ ஸ்வாமியின் அன்னையார் ஸ்ரீமதி பிரேமா ராமஸ்வாமி நினைவுப் பதிவு!

யானுமிட்ட தீ மூள்க மூள்கவே

~ ஸ்வாமியின் அன்னையார் ஸ்ரீமதி பிரேமா ராமஸ்வாமி நினைவுப் பதிவு!


தினம் ஒரு பதிகம் ~ ஞான மணிமாலை

அன்னை அருமை அறிதல்!

உள்ளிருக் கையிலை யிருதிங்க ளெனைத் தாங்கிவெளி
தள்ளிய பின்னள்ளி முகர்ந்து மென்முலைப் பாலளித்து

தெள்ளிய நிலவத னொளியில் நான்துயில வேபாடி
துள்ளிவி ளையாடு கையிலுன் கைகொட்டி மகிழ்ந்து

பள்ளியில் பயிலுங் காலமுழுது மெனக்காக வேதொழுது   
அள்ளிய ணைக்கவே றொருபெண் கரமளித்த பின்விலகி

முள்ளினி லென்மட மனங்குவிய மெல்லிய மணமலரின்
உள்ளிருக் குமுவைய வளினருகரு ணையதனை யறியாது

வெள்ளி முடிபரவ வாயிலது நோக்கியேங் குமன்னையே
கொள்ளி யிடுநாளு னதருமை யறிந்துகத றியழுவேனோ!

~தினம் ஒரு பதிகம் ~ ஞான மணிமாலை பதிகம் ~ ஸ்வாமி

பதிக விளக்கம்

நான் உனது உடலுக்குள் வாசம் புரிகையில், பத்துத் திங்கள் (மாதம்) எனைச் சுமந்து, பின்னர் கருவாய் வழியே என்னைவெளியே தள்ளிய பின்னர், அள்ளியெடுத்து, உச்சி முகர்ந்து, உனது மென்மையான முலையிலிருந்து தாய்ப்பாலை ஊட்டி

தெளிவான நிலவொளி உள்ள இரவில், நான் உறங்கும் பொருட்டு மெல்லிய குரலில் பாடல்கள் பாடி,நான் துள்ளி விளையாடிய காலத்தில் என்னை ஊக்குவிக்கும் பொருட்டு கைகொட்டி மகிழ்ந்து

கல்விகற்கும் காலத்தில் நான் சிறப்பாகத் தேர்ச்சி பெற வேண்டுமென்று எனக்காக இறைவனிடம் தொழுது,என்னை அள்ளி அணைக்கும் மனையாளின் கரத்தில் எனது கரத்தைக் கோர்த்துக் கொடுத்தபின்னர் சற்றே விலகி

பலாப்பழத்தின் தோல் மீதிருக்கும் முள்ளைப் போன்ற உனது சில குணாதிசயங்களின் மீது என் கவனம் நிலைத்துவிட, அதனால்மெல்லிய மலரின் உள்ளுறையும் நறுமணத்தைப் போன்று, அன்னையாகிய உன் உள்ளிருக்கும் ஜகன்மாதாவான உமையவள் கருணையை அறியாது நான் பிழைப்புத் தலத்தில் உழன்ற போது

சிகையில் வெள்ளி போன்ற முடிக்கற்றைகள் பரவ, இல்லத்தின் வாயில் நோக்கி என் வரவிற்காகக் காத்திருந்து ஏங்கிடும் என் அன்னையே,உனது உயிரற்ற உடலைச் சிதையில் கிடத்தி, அதற்குக் கொள்ளியிடும் நாளிலாவது உனது அருமையை அறிந்து இம்மூடன் கதறி அழுவேனோ!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மேற்கண்ட பதிகம் அடியேன் மூலமாக எழுதப்பெற்றது சில ஆண்டுகளுக்கு முன்பு. அதன் சில பகுதிகள் நிகழ்ந்தது இவ்வாழ்நாளின் வெவ்வேறு காலகட்டங்களில்.

அப்பதிகத்தின் இறுதிப் பகுதி மெய்யானது 17 ஜூன் 2021 அன்று – எனது அன்னையார் ஸ்ரீமதி பிரேமா ராமஸ்வாமி அவர்கள் மதுரை மீனாக்ஷி-சுந்தரேஸ்வரர் மலரடி சேர்ந்தபோது!

உட்புறம் ஏராளமான இறையுருவங்களும், மேற்புறம் ஆன்மீகப் புத்தகங்களும் நிரம்பி வழியும் அவளது பிரத்தியேக பூஜை அலமாரி முன்பு அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தை (அனேகமாக ஆன்மீகம்தான்) புரட்டிக் கொண்டிருக்கையில், மேஸிவ் ஹார்ட் அட்டாக் / கார்டியாக் அரெஸ்ட் வந்து தாக்க, க்ஷண நேரத்தில் பிராணன் விடைபெற்று வெளியேறி விட, ‘அண்ணா, அவர் அம்மா இஸ் நோ மோர்,’ என்று எனது இளைய சகோதரர்களில் ஒருவன் அலைபேசியபோது ‘வாட்!‘ என்று நம்பமுடியாமல் கேள்விக்குறியானது என் மனம் மட்டுமல்ல என்பது திண்ணம். அன்னை காலமாகிவிட்ட தகவலை செவிப்புலன் மூலம் என்னுள் அனுப்பிய அலைபேசியுடன், எம் இல்லத்தில் ஆட்சி புரியும் அம்மையான தேவி லிங்க பைரவியின் சன்னிதானத்தில் சென்று சரிந்து அமர்ந்து விட்டேன். தகவல் கேள்விப்பட்ட அனைவரையும் திகைத்துப் போக வைத்தது என் அன்னையின் ஸடன் டிப்பார்ச்சர்.

இருபதுகளில் திருமணமாகி, முதன்முறையாக வெளியூரில் (அதிகமில்லை, 60 கி.மீ.யில்தான்) வாழத் துவங்கி, கணவனின் பணி ஓய்வுபெற்ற தந்தையார், இளைய சகோதர சகோதரிகளைக் கவனித்துக் கொண்டே, ஐந்து பிள்ளைகளைப் பெற்று, வளர்த்து, திருமணம் செய்வித்து, பேரக்குழந்தைகளின் பெற்று, அவர்களது வளர்ச்சியில் மகிழ்ந்து, எழுபத்தைந்து வயது வரை மதுரைக்காரியாகவே பிறந்து, வாழ்ந்து (இடையிடையே கணவரின் பணி நிமித்தமாக சில ஊர்களில் வாழ்ந்த காலம் தவிர்த்து) மறைந்தவர் அடியேனது தாயார். மீனாக்ஷிப்பட்டணம் தவிர வேறெங்கும் வாழ்வதில்லை என்ற வைராக்கியம் கொண்டவர் கடைசிவரை.

அவ்வப்போது சிறு தொந்திரவுகள் தரும் வயோதிக உடல் உபாதைகள், இயல்பான குடும்பச் சச்சரவுகள், மனஸ்தாபங்கள் தவிர்த்து, உயிர்போகும் நிலையில் அவளது உடல்நிலையோ, மனநிலையோ இருந்ததாகத் தெரியவில்லை எவருக்கும். எந்தவொரு சாதாரண தினத்தையும் போல அன்றும் உணவு தயாரித்துவிட்டு எம் தந்தையோடு அதை மதியம் உட்கொண்டிருக்கிறாள்.. மாலையில் அவருடன் தேநீர் அருந்தியிருக்கிறாள்.. காற்றோட்டமுள்ள ஜன்னல் அருகில் அமர்ந்து புத்தகத்தைப் புரட்டியிருக்கிறாள்.. பட்டென்று போய்விட்டாள். ஆம்புலன்ஸில் ஏறாமல், மருத்துவமனை வாசல் வரை கூடச் செல்லாமல், இருந்த இடத்திலேயே, ‘ராஜ மாதங்கி’ என்ற அவளது இல்லத்திலேயே,  இமைப்பொழுதில் போய்விட்டாள்!

சொல்லிக்கொல்லாமலேயே விடைபெறுகையில் உடனிருந்தது அவளது ஆதர்ச கணவராகிய எமது தந்தையார் மட்டுமே. ஐம்பது வருடங்களைத் தாண்டிய அற்புத தாம்பத்தியம் அவர்களுடையது. அவர் அலைபேசியில் அவசரமாக அழைத்தவுடன், அவளுடைய அருமைத் தம்பி உடனே கிளம்பி வந்து, சுவாசம் மீள்வதற்காகத் தானறிந்த முயற்சிகளைச் செய்து பார்த்திருக்கிறார்; பயனில்லை. ஆம்புலன்ஸ் ஆசாமிகள் வந்து, பார்த்து, திடீர் மரணத்தை கன்ஃபர்ம் பண்ணிவிட்டுக் காணாமற் போய்விட்டார்கள்.

கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டு, இதுவரை அதன் பாதிப்பின்றித் தப்பிவிட்டாள் (நன்றி முருகா, ‘யாமிருக்க பயமேன்’ என்று அக்கொடுமையில் சிக்காது அவளைக் காத்து ரக்ஷித்தமைக்கு). ஆனால், காலனின் கேல்குலேட்டரில் அவளது பிராணன் கணக்கு முடிந்து போய்விட, அந்த தர்மராஜன் அவளது வாழ்நாளை ரீசெட் பண்ண, அன்னை மீனாக்ஷியின் பரம பக்தையென்பதால், எம தூதர்கள் அன்று மரியாதையோடு வழிவிட்டு ஒதுங்கிக் கொள்ள, சிவகணங்கள் வந்து அவளைக் கொண்டாட்டமாக அழைத்துச் சென்றிருக்க வேண்டும். தானாக, தனியாக வெளியூர் பயணம் கூட பண்ணிப் பழக்கமில்லாதவள்.. எத்தனையோ லைட் இயர் தொலைவில், திருக்கயிலாயத்தில் எப்படித் தனியாக சமாளிக்கிறாளோ தெரியவில்லை!

அவசரமாக டாக்ஸி புக் பண்ணி, ஈ-ப்பாஸ் எடுத்து, பயணத்திற்கு புக் பண்ணிய அவசர டாக்ஸி டிரைவருக்கு ஹார்ட் அட்டாக் வந்து, இரண்டு மணி நேரம் அல்லாடி அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, வேறொரு டிரைவர் வந்து இன்னோவாவை ஓட்ட, பொலபொலவென்று பொழுது விடிகையில் மதுரை சென்று சேர்ந்து, ஐஸ் பெட்டியில் உறங்கிக் கொண்டிருந்த அவளது முகத்தைப் பார்த்தால், ‘ஹா, இவ்வளவுதானா இந்த வாழ்க்கை ஆட்டம்‘ என்பதுபோலக் கண்மூடிச் சிரித்துக் கொண்டிருந்தாள். ‘வாடாப்பா பெரியவனே‘ என்று வழக்கமான அவளது வரவேற்பு வாய்திறந்து வரவில்லை என்பது மட்டும்தான் மாற்றமாகத் தெரிந்தது. அதே வீடு, அறிந்த மனிதர்கள் சுற்றிலும், ஆனால் அந்த இல்லத்தின் அரசியான அவள் மட்டும் மீளாத்துயிலில்.

படுத்த படுக்கையாகவெல்லாம் இல்லாமல், யாருக்கும் தொந்திரவு கொடுக்காமல் போய்விடவேண்டும்‘ என்பாளாம் – துக்கம் விசாரிக்க வந்தோரில் சிலர் பகிர்ந்து கொண்டனர். கடைசிவரை தனிக் குடித்தனம்தான் கணவருடன். பிள்ளைகள் எல்லோருமே நன்கு கல்வி கற்று, நல்ல பணிகளில் அமர்ந்து, ஐவருள் நால்வர் சென்னையில் வாசம் செய்து வந்தாலும், அவளது பேஸ் என்னவோ ஹாலாஸ்ய க்ஷேத்திரம்தான் எப்போதும். பிள்ளைகளைப் பார்க்கக் கிளம்பி வந்தாலும் ஒரு சில வாரங்கள்தான் சென்னை வாசம். பிறகு தந்தையரின் ஆல்டைம் ஃபேவரிட் ரயிலான பாண்டியன் எக்ஸ்பிரஸில் ஏறிக் கிளம்பிச் சென்றுவிடுவாள் மதுரைக்கு. அது என்னவோ ஃபெவிகுவிக் போட்டு ஒட்டிய மாதிரி, பிரிக்கமுடியாத  ஒரு சொந்தம் அவள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த அந்தத் தொன்மையான ஊருடன்.

ஐந்து பிள்ளைகளின் குடும்பம் தவிர்த்து, உற்றார், உறவினர் படை மற்றும் அருகாமையில் வசிப்போர், வீட்டு வேலை  செய்பவர், காய்கறி / பால் விற்பனையாளர், குடும்ப வாத்தியார், ஆஸ்தான மருத்துவர் என்று அவளது யுனீக் டச்சை உணர்ந்தோரின் கான்ட்டாக்ட் லிஸ்ட் மிக நீளம்.
சாஸ்திர, சம்பிரதாயங்கள் துவங்கி, சமையல், கோலம், பண்டிகை, பாட்டு என்று அவளது சப்ஜெக்ட் மேட்டர் எக்ஸ்பர்ட்டைஸ் மிக அகலம்.
உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் அவள் பலரச நாயகி.
எக்காலத்திலும் அவள் முகத்தில் அம்மன் விக்கிரகம் போன்ற ஒரு சாந்நித்தியம் உண்டு. இப்போது அவளது ஆதர்ச அம்பாளான அங்கயற்கண்ணியிடமே போய் ஒன்றிவிட்டாள் போலும்!

உற்றார் புடைசூழ, ஈமக்கிரியைகள் துவங்க, அவளது தலையை எனது தொடையில் கிடத்தி, சாமகானத்துடன் (சாம வேத மந்திரங்கள்) கர்ண மந்திரம் சொல்லப்படும்போது, அருகாமையில் அவளது மலர்ந்த முகத்தைச் சில நிமிடங்கள் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். உள்ளே என்னென்னவோ எண்ணங்கள் சுழன்று மிதந்தன.

போதும்மா இந்தப் பிறப்பு.. பார்க்க வேண்டியதெல்லாம் பார்த்தாச்சு.. இனிமேலும் இந்த உடம்பு தாங்காது போல இருக்கு.. ஆஸ்பத்திரியிலோ, வீட்டிலோ படுத்த படுக்கையாகவெல்லாம் இருக்க வைத்துப் படுத்தாமல், ஏதோ தெளிவாகப் பேசிக்கொண்டு, நடமாடிக்கொண்டிருக்கும்போதே பட்டென்று கூட்டிக் கொண்டு போய்விடடி தாயே, தீர்க்க சுமங்கலியாக..

என்று உன் ப்ரிய தேவி மீனாக்ஷியிடம் கேட்டாயா அம்மா..
உடனே அவள் தன பரம பக்தைக்குக் கேட்ட வரம் கொடுத்த மாதிரி கூட்டிக் கொண்டு போய்விட்டாளோ..
அப்படியென்ன அவசரம் உனக்கு..
நன்றாக உன் ஆசைப்படியே மீனாக்ஷிப் பட்டணத்தில் புருஷனுடன் தனிக்குடித்தனம்தானே பண்ணிக்கொண்டிருந்தாய் 75 வயதிலும்..
சதாபிஷேகம் பண்ணிக் கொண்டு, சர்வ ஜனங்களையும் ஆசீர்வதித்துவிட்டு, ஆனந்தமாகப் போயிருக்கலாமே..
அதுக்குள்ள ஏன் போய் விட்டாய் இப்படி யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல்.. 
உன்னிடம் பேசவும், பகிரவும் விஷயம் எத்தனையோ இருக்கின்றதே..
வாலண்ட்டரி ரிட்டயர்மண்ட் பெற்று ஆறு வருடங்கள் ஆகிவிட்டாலும், அதில் ஆறு நாட்களைக் கூட உனக்காக ஒதுக்காமல் போய்விட்டேனே..
நீ இருக்கும் போதே அதையெல்லாம் பேசாமல், இனிமேல் யாரிடம் போய்ப் பேசுவது..?
அப்படியே பேசினாலும், கேட்கிற ஆசாமிக்கு உன்னளவு எல்லா டாப்பிக்கும் புரியுமோ..! 

எந்தக் கேள்வியையும் அவளிடம் வாய்திறந்து கேட்கவுமில்லை; அவற்றுக்கு அவள் பதில்கூறப் போவதுமில்லை. அந்த மாதிரி சீனெல்லாம் முடிந்து, இதுதான் கிளைமாக்ஸ். பகவான் வைத்த ஃபுல்ஸ்டாப்பைக் கமாவாகவோ, செமிக்கோலனாகவோ மாற்றும் வல்லமை மியர் மார்ட்டல்ஸாகிய நமக்கு ஏது!

இப்பிறவிக்கு அவளது பிராணன் கோட்டா முடிந்தது. போய்விட்டாள். அவ்வளவுதான். பகீரதப் பிரயத்தனம் பண்ணினாலும் போன உயிரை யாராலும் திரும்பக் கொண்டுவர முடியாது. அதேசமயம், ‘லார்ஜர் தேன் லைஃப்’ என்பதுபோல வாழ்ந்த அவளது இடத்தில் இப்போது இருக்கும் வெற்றிடத்தை வேறு யாராலும் நிரப்பவும் முடியாது.

மந்திரங்கள் முழங்க, அவளது பூத உடலைத் தூய்மைப்படுத்தி, அலங்கரித்து (என்றும் மீனாக்ஷியைப் போல ஓளிர்ந்தவள், இறுதி அபிஷேக அலங்காரத்திற்குப் பின்னர் எம் குலதெய்வங்களில் ஒன்றான செல்லியம்மனைப் போலத்தான் மிளிர்ந்தாள் ), அமரர் ஊர்தியில், அவள் பெற்று, வளர்த்த ஐந்து பிள்ளைகள் மற்றும் அக்கணம் வரை சாக்ஷாத் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியைப் போன்றே அவளுடன் ஐம்பதாண்டுகளுக்கு மேல் வாழ்ந்த  கணவராகிய எம் தந்தையாருடன் ஏறி, தத்தனேரி மயானத்தில் போய் சிதையில் கிடத்தி,
முன்னையிட்ட தீ முப்புரத்திலே
பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே
அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே
யானுமிட்ட தீ மூள்க மூள்கவே

என்று பேய்க்கரும்பில்லாத, மெய்ஞானம் இன்னமும் கைவரப்பெறாத சாமானிய பட்டினத்தார் போலக் கொள்ளியிட்டுவிட்டு, தலைமுழுகு முன்பாக, சவரம் செய்தவர் ‘இவ்வளவு நீளமான தாடியை இதுவரைக்கும் யாருக்குமே இங்கன வெச்சு எடுத்தது இல்லைண்ணே,’ என்றபோது மையமாகச் சிரித்து வைத்தேன்.

மறுநாள் இருந்த சுவடின்றி எரிந்து போன (பெருநோய் சூழலில், தினசரி ஓவர்டைம் செய்து, அயராமல் உழைக்கும் மயான ஊழியர்களுக்கு எம் வந்தனம்) அவளது பூவுடலின் அஸ்தி எனும் சில எலும்புத் துகள்களைச் சேகரித்துக் கொண்டு, சிறுவயதில் அவள் தலையில் கட்டிய ரிப்பனைப் போன்ற சைஸில் மெலிதாகத் திருவேடகத்தில் ஓடிக்கொண்டிருந்த வேகவதி எனும் வைகை நதியில் (அடுத்த வாரத்திலேயே அதே நதியில் வெள்ளம் வந்தாற்போல் நீர் ஓடிக்கொண்டிருந்தது) அவளைக் கரைத்து, ஃபிஸிக்கல் ரெல்மிலிருந்து அலமேலு எனும் பிரேமா ராமஸ்வாமிக்கு பை சொல்லி அனுப்பி, ஏறத்தாழ அரை மண்டலம் தினங்களாகி விட்டன.

எஞ்சிய ஈமக்கிரியைகள் 9ம் நாள் துவங்கிப் 13ம் நாள் வரை, அன்னை மீனாக்ஷி மற்றும் குலதெய்வம் குடிகாக்கும் குமரமலையான் பேரருளால் செவ்வனே நிறைவுற்றன. இம்மாதிரியான விஸ்தாரமான அபர கர்மாவில் என்னதான் செய்கிறோம், எதற்குச் செய்கிறோம் என்பதை, நன்னிலம் ப்ரும்மஸ்ரீ  ராஜகோபால கனபாடிகள் எழுதிய ‘பித்ரு பூஜனம்’ என்ற புத்தகத்தைப் படித்து ஓரளவு தெளிந்தேன். குடும்ப வாத்தியாரும் ஒவ்வொரு தினமும் என்ன செய்கிறோம் என்று விளக்கமளித்து உதவினார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய வேத காலத்தில், நம்முடைய மூதாதையர்கள், உயிருடன் இருக்கும்போது எங்ஙனம் வாழ்வதென்று வழிகாட்டியது மட்டுமல்லாமல், உடலிலிருந்து உயிர் பிரிந்த பிறகு, அவ்வுடலில் அதுவரை வசித்த ஜீவனுக்கு, அதன் கர்மவினைப்படி அடுத்த நிலைக்குச் செல்ல வழிகாட்டவும் விரிவான வழிமுறைகளை அளித்துள்ளது வந்தனத்திற்குரிய ஆச்சரியம்.

13ம் நாளிலிருந்து நாங்கள் அவளைக் காண்பது எல்.ஈ.டி பிரேமுக்குள் உயிர்ப்புடன் சிரிக்கும் அவளது புகைப்படத்திலும் (ஐவருள் ஒருவர் புகைப்பட நிபுணராக இருப்பது பல வகைகளிலும் பயன்படுகின்றது – இது உட்பட), அவரவர் இல்லங்களில் ஏற்கனவே உள்ள படங்கள் மற்றும் டிஜிட்டல் ஒளிப்படங்களிலும், மனத் திரையில் ஓடும் பழம் படங்களின் ரீபிளேயிலும்தான்.

நிஜம் போய்விட்டது, இனி வெறும் நிழல்தான் இருக்கும்‘ என்று நாம் நினைத்தாலும், நிஜம் என்று உணர்வதும்கூட மற்றொரு நிழல்தான் என்பதே மெய்.

எங்களது தாயாக ஐவரைப் பெற்று, வளர்த்து, ஆளாக்கி மகிழ்ந்து, மறைந்த அலமேலு என்கிற பிரேமா ராமஸ்வாமி என்பது, இப்பிறவியில் அந்த ஜீவன் அணிந்த வேடம்தான். அதன் கர்மவினையைப் பொறுத்து, அடுத்த பிறவியில் மற்றொரு வேடம். அல்லது இப்பிறவியியோடு அவளது கர்மாவின் சுமை கரைந்து போய்விட்டதென்றால், ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்ற பிறப்பு-இறப்பற்ற பெருவீடெனும் முக்தி. இப்பிறவியில் இவ்வேடத்தை விட்டபின் அவளுக்குக் கிட்டியது எதுவென்று யாமறியோம் பராபரமே!

ஸ்விட்ச் ஆஃப் பண்ணிய பல்பைப் போல இவ்வளவுதான் வாழ்க்கை டிராமா – உலகில் ஜனித்த உயிர்கள் எல்லாவற்றுக்குமே. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இதே டிராமாதான் – தலைமுறை தலைமுறையாக. இருந்தாலும், ‘நான் யார் தெரியுமா!’ என்று இன்னமும் தனிப்பட்ட மனிதர்களின் அகந்தை ஆட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அதுவும் முடியும் ஒருநாள் – படக்கென்றோ, இழுத்துக்கோ பிடிச்சுக்கோ என்றோ… இதுவும் கடந்து போகும், வாழ்க்கை எனும் கால ஓட்டத்தில், வெகு இயல்பாக.

மீனாக்ஷி அம்மையின் பரம பக்தையான எனது தாயாரின் உடல் கடந்த உயிர்ப்பயணம் தடையின்றித் தொடர, பைரவி தேவியின் சந்நிதியில் துவங்கி நிகழும் ‘கால பைரவ கர்மா’வும், அவளை நதியில் கரைத்த மறுநாளே நிறைவுற்றது தேவியின் பேரருளால்தான் என்பதில் ஐயமில்லை.
அளப்பரிய பெருங்கருணை கொண்ட ‘இறையருளால் ஆகாதது ஏதுமில்லை’ என்பதற்கு, கோவிட்-19 பெருநோய்த் தொற்று இன்னமும் பரவலாக உள்ள, அதன்காரணமாக தடையுத்தரவு அமல்படுத்தப்பட்ட  இத்தகைய கடினமான காலகட்டத்தில், இயற்கையாக மரணம் நிகழ்ந்ததோடு மட்டுமல்லாமல், இயல்பாக எவ்விதத் தடையுமின்றி, பெற்ற பிள்ளைகள் ஐவர் மற்றும் அவர்களது இல்லத்தரசிகள் மற்றும் பேரக்குழந்தைகள் புடைசூழ, அன்புக் கணவரும், உடன்பிறந்தோரும், உறவினரும் உடனிருக்க, வைபவமாக நடைபெற்ற எனது அருமைத் தாயாரின் ஈமச்சடங்கே சாட்சி!

பிராணன் போன அந்தக் கணத்தில் என்ன / யாரை நினைத்திருப்பாள் என் அன்னை..?’ என்பது வாழ்வின் விடையற்ற வினாக்களில் ஒன்றுதான் நிச்சயமாக. கோராவில் (Quora) ஆயிரத்திற்கு அருகாமையில் வினாக்களுக்கு இதுவரை விடையளித்துள்ள அடியேன் கூட, அக்கேள்விக்கு எத்தனையோ விதமான விடைகளைக் கற்பனைதான் பண்ணிக் கொள்ள முடியுமே தவிர, உண்மையான விடை எதுவாக இருப்பினும், அது அவளோடு போய்விட்டது என்பதுதான் உண்மை.

துக்கம் விசாரிப்போர் பலர் பகிர்ந்து கொள்ளும் எண்ணற்ற சுவையான சம்பவங்களின் நினைவுகளில் அவளது தொடர்ச்சியைக் கண்டு ஓரளவு அமைதி அடையலாம் உற்றாரும், உறவினரும். இனி வரவிருக்கும் பண்டிகைகள் மற்றும் திருமணம் போன்ற இல்ல விழாக்களின்போதுதான் தெரியும், எந்த சந்தேகத்திற்கும் ஏதாவது விடையளிக்கும், வழிகாட்டும், அனுபவம் சார்ந்த, விஷய ஞானமுள்ள,  அவளோடு மறைந்துபோன தகவல் களஞ்சியத்தின் அளவு, ஆழம் மற்றும் அருமை.

பிறவியெடுத்து எவ்வுயிர்க்கும் மரணம்தான் ஒரே நிதர்சனம். வாழ்க்கை எக்ஸ்பிரஸ்வேயின் தவிர்க்கவே முடியாத ட்டோல் பூத் அது மட்டும்தான். எனினும்

மரணம் என்பது ஒரு உயிரின் முற்றுப்புள்ளி அல்ல.
குறிப்பிட்ட ஒரு பிறவியின் வெற்றுப்புள்ளி என்பதே உண்மை!

~மெய்க்கோள் by ஸ்வாமி

உயிரின் வாழ்க்கைப் பயணம், கர்மத்தின் சுமை காணாமற் போகும்வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் – வேறு பெயர், ஊர், மற்றொரு குடும்பம், பணி என்றவாறு… குருவருளால் மெய்ஞானம் கிட்டும்வரை!

எத்தனையோ பிறவிகளில் அவரவர் குவித்துவைத்த கர்மவினையைப் பொறுத்து, பிறப்பு-பிழைப்பு-இறப்பு என்ற நாடகம் தொடரும். அது ஒரு சுழல். அதிலிருந்து விடுபடும் வாய்ப்பு மனிதராகப் பிறவியெடுத்து யாவர்க்கும் உள்ளது. இடையறாத இறை நம்பிக்கை மற்றும் வழிபாடு, எளியோர்க்கு உதவுதல், உயிர்கள் அனைத்தின் மீதும் கருணை காட்டுதல், பசித்தோருக்கு பேதமின்றி உணவளித்தல், வருந்துவோருக்கு ஊக்கமளிக்கும் வகையில் இன்சொற்களைப் பேசுதல், இறக்கும் கணம் வரை இறந்த கால நினைவுகளிலேயே ஊறியிராமல் ‘இக்கணத்தில், சூழ்நிலையின் தேவைக்கேற்ற, பயனுள்ள செயல் ஏதேனும் புரிய என்னால் இயலுமா,’ என்று முனைப்பாகச் செயலில் கவனம் செலுத்துதல், போன்ற எளிய நற்கருமங்களில் நம் கவனம் இருக்குமானால், வருவதும் போவதுமாக வாழ்க்கை ஒரு விளையாட்டே என்பது புரிந்து விடும்.

ஆதி அந்தமற்ற ஆண்டவனின் படைப்பு நடனத்தில் நமது ஒவ்வொரு பிறவியும் ஒரு சிறு ததிங்கினத்தோம். அதை ரசிக்கும்படி செய்வதற்கான திறன் மற்றும் கருவிகள் நமக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. ஆதிகாலம் தொடங்கி, ஆட்டமும் நடந்து கொண்டேதானிருக்கின்றது. இயக்குநராகிய இறைவன் ‘கட்’ சொல்லும் பிரளய காலம் வரை காட்சிகள் தொடரும். இதில் நான்டெஸ்கிரிப்ட் துணை நடிகராகவோ, நாட்-டு-பீ-மிஸ்ட்  குணச்சித்திர நடிகராகவோ, காண்போரைக் களிப்புறச் செய்யும் நகைச்சுவை நடிகராகவோ, கதாநாயக/கியாகவோ நமது ரோலை மாற்றிக் கொள்வது நம் கையில்தான் உள்ளது. அதை உணர்ந்தோரின் எண்ணிக்கை குறைவுதான் – ஒவ்வொரு பிறவிக் காட்சியிலும்!

வாழ்க்கை என்கிற டான்ஸ் டிராமாவில், நமது பிறவிக் காட்சியென்பது குறிப்பிட்ட காலம்தான் தொடரும் – ஒவ்வொரு முறையும். எனினும் இது காலம் (டைம் / time) சார்ந்ததல்ல; பிராணன் சார்ந்தது. சும்மா ஒரு பால் பார்க் நம்பராக நமது பிராணன் கோட்டா ஒரு கோடி என்று வைத்துக் கொள்வோம். இந்த ஒரு கோடிப் பிராணனை நாம் எப்படி செலவழிக்கப் போகிறோம் என்பது நமது அறிவு, திறன், வாழும் சூழல் மற்றும் சிந்தைத் தெளிவைப் பொறுத்தே அமையும்.

  • எதற்கெடுத்தாலும் கோபப்பட்டு, எல்லோரிடமும் சள்ளென்று எரிந்து விழும் ஒரு ஆசாமி, ஒரு கோடியை, ‘இப்படிக் கத்திக் கத்தியே என் பிராணன் போகுது’ என்று விரைவாகச் செலவழித்து விடுவார். இந்த மாதிரி ஆசாமிகளுக்கு பீ.ப்பீ, கொலஸ்டிரால், ஹார்ட் எயில்மெண்ட்ஸ் என்று பல சங்கடமான தோழர்கள் உடலுக்குள்ளேயே இருப்பது சகஜம். அவர்கள் உயிருடன் இருக்கும் குறுகிய காலத்தின் போதும், உயிர் போகும் நிலையிலும், பிறரைத் துன்பத்தில் ஆழ்த்துவதோடு, தானும் கவலையிலும், துயரத்திலும் ஆழ்ந்து, ஆனந்தமற்ற நிலையிலேயே வாழ்ந்து மடிவர். எதைக் கண்டாலும், காணாவிட்டாலும் பயந்து நடுங்குபவர்களின் கதியும் கிட்டத்தட்ட இதேதான். சினம், பயம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகள் நிச்சயமாகப் பிராணனின் தோழர்கள் அல்ல.
  • சற்றே பொறுமையாகவும், கவனத்துடனும் வாழ்க்கையை அணுகுபவர் பிராணனைக் கொஞ்சம் மெதுவாகச் செலவழிப்பார். சினத்தால் விளையும் பிராணன் செலவு பொறுமையான ஆசாமிகளுக்குப் பொதுவாகக் கிடையாது. வெற்றியையும், தோல்வியையும் சமமாக ஏற்றுக் கொள்பவராக இருந்து விட்டால், அதீத உணர்ச்சி வசப்படுதல் இல்லாமற் போக, அதனாலும் பிராணன் சேமிக்கப்படும். இத்தகையோர், பிறருக்கு அதிகமாக உதவும் தன்மை உடையவராக இல்லாதிருந்தாலும் கூட, துன்பமும் விளைவிக்க மாட்டார்கள் என்பதால், இவர்தம் வாழ்க்கை கடுமையான ஏற்றமோ, இறக்கமோ இல்லாத பாதையில் நிகழும் பயணத்தைப் போல, சுமுகமாக நிகழும்.
  • பிராணன் உள்ளே போவதும் வருவதும் பற்றிய கவனமே இல்லாதோரைப் போல அல்லது, பிராணனைக் கையாளப் பழகிய ஆசாமிகளுக்கு, எவ்விதமான சூழ்நிலைகளில், எந்த மாதிரி எண்ணம் மற்றும் செயல்களால், பிராணன் அனாவசியமாக செலவழிகின்றது என்பது பற்றிய தெளிவு இருக்கும் என்பதால், அவர்கள் பிராணனைப் பொறுத்த அளவில் கஞ்சனைப் போலத்தான் செலவழிப்பர். அத்துடன் அவர்கள் சேவை மனப்பான்மையுடனும், பாரபட்சம் இல்லாமலும், தன்னால் இயன்ற அளவில் பிற உயிர்கள் அனைத்திற்கும் உதவ முற்படுவோராகவும் இருப்பின், அன்பும், அமைதியும், ஆனந்தமும் நிறைந்த அவர்தம் வாழ்க்கையில், பிராணனானது சீராக ஓடும் வற்றாத ஆற்று நீரைப் போன்று, நீண்ட காலம் செவ்வனே இயங்கி, வாழ்நாளையே நீட்டிக்கவும் கூடும்.  

பெரும்பாலான மனிதர்களை இம்மாதிரி நிர்ணயம் பண்ணுவது சாத்தியமில்லை. ஏனெனில், மேற்கண்ட உதாரணங்களின் கலவையாகவே நமது வாழ்க்கையானது அமைந்துள்ளதை நாமறிவோம்.

எனது தாயாரும் வாழ்வில் பல ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்தவர்தான். அவருக்கும் கோபம், வருத்தம் போன்ற உணர்ச்சிகள் உண்டு. எனினும், அத்தகைய இடர்களை அவர் தனது மாறாத இறை பக்தி; வேண்டுவோர் அனைவருக்கும் தானறிந்தவற்றைக் கொண்டு வழிகாட்டுதல்; விரிந்த குடும்பத்தில் பலருடன் அளவளாவி, அவர்களின் தேவைகளுக்கு உதவுதல்; தன் குடும்பத்தாருடன் கூடியிருக்கும் நேரங்களில் தலைமுறை மாற்றம் பாராமல் கலந்துறவாடுதல்; பாரம்பரியமான கலாச்சார செயல்பாடுகள் மற்றும் வழிமுறைகளை விடாமல் கடைப்பிடித்தல் போன்ற விஷயங்களில் ஆர்வத்துடன் கவனம் செலுத்தி, உடலில் ஏற்பட்ட உபாதைகளை மீறி, உயிரின் ஊட்டத்தை நீட்டிக்க வழிகண்ட ஒரு எளிய மதுரைவாழ் மத்யமர் குடும்பத்தலைவிதான்.

என்ன, 75 வரை எப்படியோ நீட்டித்தவர், அதற்குமேல் விருப்பமோ, ஆர்வமோ குறைந்துபோக, ‘இருந்தவரை நன்றாகவே வாழ்ந்தேன், அந்த சந்தோஷம் போதும்’ என்று ஒரு சாதாரண தினத்தின் மாலைப்பொழுதில், யாருமே சஸ்பெக்ட் பண்ணாத கணத்தில், பிராணனுக்கு விடையளித்து, இப்பிறவியில் அணிந்த வேடத்தைக் களைந்து, வாழ்க்கை எனும் தொடர் பயணத்தின் அடுத்த நிலைக்கு / நிலையத்தை நோக்கிச் சென்று விட்டார்!

கோராவில் வினா எழுப்புவோர் சிலர் கடந்த காலத்தின் நிகழ்வு எதையேனும் மாற்ற முடியுமென்றால், இப்போது இல்லாது போன எவரையேனும் சந்திக்க முடிந்தால், ஏற்கனவே செய்தவற்றில் எதையாவது மாற்ற முடிந்தால், என்ன செய்வீர்கள் என்றெல்லாம் கேட்பதுண்டு. பொதுவாக அத்தகைய வினாக்களை ‘அடுத்தவரிடம் செல்லட்டும் [அ] கடந்திடுக‘ என்று விடையளிக்காமல் விட்டுவிடுவதுண்டு. எம் அன்னை இனி இல்லை என்ற நிலையில், அவ்வினாவிற்கு விடையை என்னுள்ளேயே தேடினேன்…

  • நள பாகம், பீம பாகம் என்பதுபோல், ‘பிரேமா பாகம்’ என்று கூறுவது மிகைப்படுத்தப்படாத மெய்தான் என்று அவரை நன்கு அறிந்தோர், அவர் செய்து பரிமாறிய உணவை உண்டோர் அனைவரும் அறிவர். சமையலறை சாம்ராஜ்யத்தின் முடிசூடா ராணி அவள். அவளறிந்த எண்ணற்ற ரெசிபிக்களை, அவளது அற்புதமான சமையற்கலை திறமையைப் படம்பிடித்து யூடியூபில் சேனல் தொடங்கிப் பலருடன் பகிர்ந்திருக்கலாம்…
  • திருத்தல யாத்திரை செல்வதில் மிகுந்த ஆர்வமுடையவள். ஆன்மீகப் பத்திரிகைகள், புத்தகங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றிலிருந்து அவள் சேகரித்து வைத்திருந்த திருத்தல பக்கெட் லிஸ்ட் பெரியது. அவளது உடல் சற்றே வலுவுடன் இருந்தபோது, திருக்கயிலாயம், ச்சார் தாம், சக்தி பீடங்கள் என்று யாத்திரைகளுக்கு அழைத்துச் சென்று மகிழ்வித்திருக்கலாம்… 
  • எங்களது இளமைப் பருவத்தில் எத்தனையோ பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு மதுரை சென்று பெற்றோருடன் சேர்ந்து கொண்டாடியிருக்கிறோம். பிற்காலத்தில், அவள்தான் எங்களைத் தேடிப் பலமுறை வரவில்லை என்று நினைக்காமல், அவ்வப்போது சும்மா பார்க்கிங் லாட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் காரை எழுப்பி, மதுரைக்கு ஒட்டிச் சென்று, வருடந்தோறும் அவளுடன் சில தினங்களைச் செலவிட்டிருக்கலாம்… அவள் போக விரும்பிய இடங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கலாம்…
  • அவள் செய்யாத பூஜை இல்லை; இருக்காத விரதமில்லை; கொண்டாடாத பண்டிகையில்லை.. வழிபடாத இறை வடிவமில்லை… தொன்மையான கலாச்சார அம்சங்கள் பலவற்றில் அவளுக்கு இருந்த ஆழ்ந்த அனுபவ அறிவைச் சேகரித்து, எதிர்கால சந்ததியினருக்கு உதவும் வகையில் ஒரு வழிகாட்டிப் புத்தகமோ, அடலீஸ்ட் வலைப்பதிவோ வெளியிட்டிருக்கலாம்…
  • ஆனந்தம், வருத்தம் என்று எந்நிலையில் இருந்தாலும், அதை அவள் வெளிப்படுத்திய விதம் பாட்டுப் பாடுவதன் மூலம்தான். எம்.எஸ்., எம்.எல்.வி., என்.சி.வி., போன்றோருக்குப் போட்டியாக இல்லாவிட்டாலும் (இளவயதில் முறையாகப் பயிற்சி பெற்றிருந்தால் ஒருவேளை அவர்களைப் போன்று அவளது குரலையும் ஆயிரக்கணக்கானோர் கேட்டு மகிழ்ந்திருக்கக் கூடும்), மெல்லிய குரலில் அவள் இனிமையாகப் பாடுவதை ரசிப்பது எவர்க்கும் எளிது. அடியேன் மூலம் ‘தினம் ஒரு பதிகம்’ இசைப் பதிகங்கள் எழுதப் பட்டுக் கொண்டிருந்த காலத்தில், ஒரு முறை எனது இல்லத்திலேயே அவளும், நானும் சில பதிகங்களை வாய்விட்டுப் படி மகிழ்ந்தோம். அதேபோல, சில ‘குஹ மணிமாலை’ பதிகங்களை, குலதெய்வம் குடிகாக்கும் குமரமலையான் சந்நிதியில் அபிஷேகம் மற்றும் அலங்காரம் நிகழ்கையில் குடும்பமாகக் கூடிப் பாடித் தொழுதுமிருக்கிறோம். அவற்றில் ஒருசில பதிகங்களையாவது அவளைப் பாடச் சொல்லிப் பதிவு செய்திருக்கலாம்…
  • பல துறைகாளில் ஆர்வம் கொண்டவள் அவள். எங்கள் இல்லத்தின் ஹேண்டிமேன் உண்மையில் அந்த வொண்டர் வுமன்தான். எங்களது பள்ளிப்பிராயத்தில் அவ்வப்போது ஊர் மற்றும் வீடு மாற்றியபோதும் (அரசு ஊழியரின் ஆதார சாபங்களில் இடமாற்றமும் ஒன்று), அக்கேஷனல் வெளியூர் பிரயாணங்களின் போதும், கச்சிதமாக பேக்கிங் செய்வதில் ஜித்தர் அவள். என்னுடைய எனது சகோதரர்களின் ஆர்வங்கள் மற்றும் முயற்சிகளில் பலவற்றுக்கான விதை அவளிடமிருந்துதான் வந்தது. பணி, குடும்ப வாழ்க்கை என்று எத்தனை பிஸியாக நாங்கள் இருந்தபோதும், அவ்வப்போதேனும், அவளது ஆசைகள் மற்றும் ஆர்வங்கள் என்ன என்று கேட்டுத் தெரிந்து கொண்டு, அவற்றில் சிலவற்றையேனும் தவணை முறையில் நிறைவேற்ற முயன்றிருக்கலாம்…

இன்னும் இதுபோல எத்தனையோ, எங்களால் நிச்சயமாகச் செய்ய முடிந்தவற்றை, மறவாது செய்திருக்கலாம்… ஆனால், ‘பொய்யாய் பழங்கனவாய்ப் போனதுவே’ என்பதுபோல், மேற்கண்ட எவற்றையுமே இனி அவளுக்கோ, அவளுடனோ, எவ்வகையிலும், யாராலும் செய்ய முடியாது என்பதே முகத்திலறையும் உண்மை.

நம்முடைய பெற்றோர், உற்றார் உயிருடன் இருக்கும்போது ஏதேதோ காரணத்தால் விலகி இருந்துவிட்டு, இல்லாது போன பின்னர் ‘ஐயகோ, இனி என் செய்வேன்’ என்று அழுது புலம்புவது ‘கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ போலத்தான். ஆக, செய்யாது விட்டதை எண்ணி மறுகாமல், என்னவெல்லாம் அவளுக்காக, அவளுடன் சேர்ந்து செய்தோம், எவ்வாறெல்லாம் சில தினங்கள் மற்றும் கணங்களையேனும் கொண்டாடி மகிழ்ந்தோம் என்று நினைவுகூர்வதே எமது உள்ளத்துயருக்கு மருந்து என்பது வெள்ளிடை மலை.

உன்னால் செய்ய முடியாததை நீ செய்யாவிட்டால் பரவாயில்லை; ஆனால்,உன்னால் செய்ய முடிந்தவற்றைக் கூட நீ செய்யாவிட்டால், அது நிச்சயம் ஒரு டிசாஸ்டர்தான்’என்பார் என் குருநாதர். செய்ய முடிந்ததைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யாமலிருந்து விட்டு, பின் புலம்புவதில் பயனேதுமில்லை.

மேற்கண்ட அனைத்துமே நானோ, எனது அன்னையை நன்கறிந்த எவருமோ செய்திருக்கக் கூடியவைதான். ஆனால், ஏதோ காரணங்களால் செய்யப்படாதவை. இனி செய்யப்பட முடியாத, ‘மிஸ்டு ஆப்பர்ச்சூனிட்டி’ ஆகிவிட்டவை. எனினும், ‘அடடா, இதை நான் செய்யாமல் போய்விட்டேனே,’ என்ற குற்றவுணர்வைச் சுமந்து திரிவதால் யாருக்கும் ஒரு பயனுமில்லை. போனது போனதுதான்.. போனவர் போனவர்தான்.!

தவறு செய்வது என்பது மனித இயல்பு. ஆனால்,செய்த தவறையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருப்பது முட்டாள்தனம்’என்று ஆங்கிலத்தில் அடியேன் ஒரு SwamyQuote எழுதியதாக ஞாபகம்.

  • எமது அன்னையார் வாழ்ந்தவரை நன்றாகத்தான் வாழ்ந்தார் என்பதில் ஐயமில்லை. அதில் எங்களது நேரடிப் பங்கு குறைவுதான் என்றாலும், பிறர் குறைகூறும் அளவிற்குப் பெற்றோரைப் பேணுவதில் தவறு ஏதும் செய்யவில்லை நாங்கள் ஐவரும் என்பதில் எமக்குப் பெருமிதமே.
  • அதேபோல், அவருக்கோ, எமது தந்தையருக்கோ இழுக்கோ, பழியோ ஏற்படும் வகையில் நாங்கள் முறையற்ற செயல்கள் எதையும் இதுவரை புரியவில்லை என்பதும், அவர்கள் எங்கள் ஐவரையும் நன்மக்களாக வளர்த்துள்ளனர் என்பதற்குச் சான்றே.
  • அவள் உயிர்பிரிந்து சில நாட்களாகிவிட்ட பின்னரும், இன்னமும் அவளது உறவை, நட்பை, செயல்களை, குணாதிசயங்களை நினைவு கூர்ந்து துக்கம் விசாரிப்போரின் எண்ணிக்கை குறையவில்லை. இது அவளது பன்முக வாழ்வுக்குக் கட்டியம் கூறுவதே. இவைபோன்ற சில விஷயங்களே, எமது அன்னையின் திடீர் மறைவை எதிர்கொள்ளத் தவிக்கும் எங்களுக்குக் கிட்டிய ஆறுதல்.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

என்ற வள்ளுவர் வாய்மொழிப்படி எமது தாயாரை நாங்கள் ஐவரும் பெருமிதம் கொள்ள வைத்தோமா என்பதை அவரிடம் இனிமேல் கேட்டு அறிய வழியில்லை.

எமது அன்னையார் ஸ்ரீமதி பிரேமா ராமஸ்வாமி அவர்களின் வாழ்வை இன்னமும் ஆனந்தமாக, மறக்க முடியாத வகையில் அமைத்திருக்கக் கூடிய வாய்ப்பு, அவரது புதல்வர்களான எங்களுக்கு நிச்சயமாக இருந்தது என்றாலும், அதை ஓரளவிற்கு நாங்கள் தவற விட்டு விட்டோம் என்பதும், அதை இனி எவ்வகையிலும் மற்றவியலாது என்பதும் உண்மைதான். இதற்கு எமது அறியாமையும், அனுபவமின்மையும் காரணமாக இருக்கலாம். அதை உணர்ந்தமைக்காக அவரும், எமது தந்தையாரும் எம்மைக் கருணையுடன் மன்னித்தருள வேண்டும்.

ஒரு புதல்வனாக நாங்கள் அன்னைக்குச் செய்யத் தவறியவற்றை, சரிசெய்யும் வாய்ப்பு எங்களுக்கு இன்னமும் உள்ளது என்பது படைத்தவனின் பெருங்கருணை. அவ்வாய்ப்பை அளிப்பவர் எமது அன்னையரின் அன்புத் துணைவராக ஐம்பதாண்டுகளுக்கு மேல் அவருடன் இணைந்து வாழ்ந்த அற்புதமான மனிதராகிய எமது தந்தையார், ‘CTO சார்’ மு. ராமஸ்வாமி அவர்கள். அவர் இவ்வுலகில் உள்ளவரை, அவரது விருப்பங்கள் மற்றும் ஆர்வங்களை நிறைவேற்றும் வகையில், இனி எங்களால் இயன்ற செயல்களை நாங்கள் நிச்சயமாக நிறைவேற்ற முயல்வோம் என்று, என்னளவில் அடியேன் உறுதி கூறுகின்றேன்.

அதேபோல, எங்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே இப்பிறவியில் பெற்றோராக ரோல் பிளே செய்யத் துவங்கிவிட்டோம் என்பதால், எங்களுக்கும், எங்களது குழந்தைகளுக்கும் இருக்கும் உறவு மற்றும், உடன்பிறந்தோருக்கிடையே உள்ள பிணைப்பையும் செம்மைப்படுத்தும் வாய்ப்பு இப்போதும் கூட எங்களுக்கு உள்ளது. அதிலும் எங்களது கவனத்தைச் செலுத்தி, எஞ்சிய வாழ்நாளை, இதுவரை இருந்ததை விட உன்னதமாகக் கூடி வாழப் பயன்படுத்தவும் முயற்சிப்போம். இதுவே, எங்கள் அனைவர் மீதும் மாறாத அன்பைச் செலுத்திய எமது அன்னையருக்கு நாங்கள் செலுத்தும் சிறப்பான அஞ்சலியாக இருக்கும். ஸ்ரீ மாத்ரே நமஹ:

~ஸ்வாமி | @PrakashSwamy 

அப்பாவின் அறிவுரைகள் வழியாக உலகத்தை உணர்ந்துள்ளீர்களா?

உங்கள் அப்பாவின் அறிவுரைகள் வழியாக உலகத்தை உணர்ந்துள்ளீர்களா?

~Quoraவிடை by ஸ்வாமி https://qr.ae/pGn7Cq

அறிவுரை கூறிப் பிள்ளைகளை வளர்க்கும் ரக தந்தை எமக்குக் கிட்டவில்லை. மாறாகத் தன் செயல்களின் மூலம் வாழ்க்கை பற்றிய பல விஷயங்களைக் குறிப்பால் உணர்த்தியவர் என் தந்தை. டாக்ஸி ஓட்டுனர்களை சக மனிதனாக மதித்து அவர்களது தேவைகளையும் – ஏற்றத்தாழ்வின்றி – பயணத்தின்போது கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை அவரைப் பார்த்துதான் கற்றுக் கொண்டேன். அதேசமயம், தானாகவே வலியச் சென்று முன்பின் அறிமுகமில்லாதோருடன் கூட அளவளாவி, அவர்களுக்கு ஏதேனும் வழிகாட்டல் அளிப்பதைக் கண்டு வியந்துள்ளேன் எனினும், அதைப் பின்பற்றியதில்லை.

அரசுப் பணியாளராகப் பெரும்பாலும் வெளியூர்களிலேயே அவர் பணிபுரிந்ததால், அவருடன் நாங்கள் செலவிட்ட காலம் வார இறுதி, விடுமுறை நாட்கள் போன்ற சிலவே. எனினும் ஐந்து பிள்ளைகளின் தேவைகள் அனைத்தையும் குறிப்பிட்ட காலத்தில் அவர் நிறைவேற்றி வைப்பதில் தவறியதில்லை. இந்நிலையில், அவருடன் விலாவாரியாகப் பல விஷயங்களைப் பற்றிப் பேசும் வாய்ப்பு எங்களுக்கு மிகவும் அரிதாகவே அமைந்தது எனலாம்.

அதற்காக அவர் அதிகம் பேசாத ஆசாமி என்றில்லை. பணிக்காலத்தில் அலுவலகக் கூட்டங்களில் மைக் பிடித்துப் பேசுமளவு திறனுள்ளவர்தான். மதுரைக்காரர்களுக்கே உரிய நாட்-சோ-ஸட்டில் (not-so-subtle) நக்கல் ரக நகைச்சுவை உணர்வும் நிறைந்தவர் என்பதால், அவர் பேச்சுக்கு உறவினர் மற்றும் நண்பர்கள் குழுவில் ரசிகர்கள் அதிகம். இந்தக் ‘குக்ரி சொருகுதல்’ ஜெனட்டிக்காகவோ என்னவோ மதுரக்காரனாகிய அடியேனிடமும் உண்டு எனினும், நம்முடைய ஜோக் எல்லாம் ரொம்பவே பிரிட்டிஷ் ரக ரை ஹியூமர் (wry humour) என்பதால் பலருக்கு உடனடியாகப் புரியாது!

அச்சத்துடனோ, அதீத மரியாதையுடனோ நோக்க / பழகத் தேவையற்ற, ஒரு சீனியர் கலீக் மாதிரிதான் அவர் எங்களுக்கு. தொடர் வழிகாட்டல் என்றெல்லாம் ஏதுமில்லை என்பதால் மெண்ட்டர் (mentor) என்று சொல்ல முடியாது. ஆனால் அதிகம் அட்வைஸ் எல்லாம் பண்ணாமல், வளர்ச்சிக்குத் தேவையான சுதந்திரம் அளித்து, வழியை நாமே கண்டறிய வழிகாட்டும் லைஃப் கோச் (life coach) மாதிரி வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம் அவரை.

படம்: அடியேன் எனது தந்தையார் திரு. மு. ராமஸ்வாமி அவர்களுடன் – அவரது எழுபதாவது ஆண்டு நிறைவு விழாவின்போது

பணி ஓய்வு பெற்றபின்னர் அவருடன் பேசுவதற்குக் காலம் நிறையவே இருந்தாலும், வாய்ப்பு அதிகமில்லை. அவ்வமயம் நாங்களெல்லோரும் பணி நிமித்தம் வெவ்வேறு ஊர் / தேசங்களுக்கு இடம்பெயர்ந்து, சம்சார சாகரத்தில் நீந்தத் துவங்கி விட்டதால், என்றோ, எப்போதோ, எங்கோ சந்தித்துப் பேசும் நிலையே தொடர்ந்தது. ஆனால், அடியேன் ‘தந்தை’ என்ற கதாபாத்திரத்தை இல்லறத்தில் ஏற்றபிறகு, ‘எப்படிண்ணே இவரும் எங்கம்மாவும் சேர்ந்து அஞ்சு புள்ளைகள வளத்து ஆளாக்கினாய்ங்க!‘ என்ற ஆச்சரியத்தில், அவர்மீது இருந்த மரியாதை நிச்சயமாக அதிகரித்தது என்பதில் ஐயமில்லை. இதை அவரிடமே கூட ‘ஒரு அப்பனாக இருப்பதன் அருமையை இப்போது அனுபவபூர்வமாக அறிந்தேன்‘ என்று பின்னர் பகிர்ந்துகொண்டேன்.

அவரிடமிருந்து கற்றுக்கொண்ட பல வாழ்க்கைப் பாடங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாக அடியேன் கருதுவது, சக்திவாய்ந்த [அ] நம்மைவிட ஏதோ ஒரு வகையில் உயர்ந்த நிலையில் இருப்போரிடம் எவ்வாறு பழக வேண்டுமென்பது. இது அரசுப்பணியில் இருந்தபோது அவர் சந்தித்த பல சக்திவாய்ந்த நபர்களுடன் உறவாடியதிலிருந்து, நேரடி அனுபவம் மூலம் அவர் கற்ற பாடம் என்றே கருதுகிறேன்.

அகலாது அணுகாது தீக்காய்வார் போல” என்பதே அப்பாடம்.

குளிர்காலத்தில் தீக்காய்வோர், எரியும் நெருப்புக்கு மிக அருகிலும் செல்லாமல், அதேகாலை மிகத் தொலைவாகவும் இல்லாமல், வெப்பத்தின் பயனைப் பெறக்கூடிய அளவிற்கு, நெருப்பிலிருந்து ஒரு சில அடிகள் தொலைவிலேயே இருப்பர். மிக அருகில் போனால் நெருப்பு வெப்பத்தை அளிப்பதற்கு மாறாக எரித்துவிடும். மிகத் தொலைவாகச் சென்றால் குளிருக்கு இதம் அளிக்க வாய்ப்பில்லை.

உயர் பதவியில் / பொறுப்பில் இருப்போர் மற்றும் சக்தி வாய்ந்த நபர்களின் அருகாமையும் இவ்வாறானதே. அவர்களது உறவு / நட்பு பயனுள்ளதுதான் என்பதில் ஐயமில்லை. ஆனால், எப்படிக் குளிர்காயும் நெருப்பிற்கு மிக அருகில் செல்லாமல், மிகத் தொலைவாகவும் சென்றுவிடாமல் அதன் பயனை அனுபவிக்கின்றோமோ, அதுபோல அவர்களிடம் ‘அகலாது, அணுகாது தீக்காய்வார் போல‘ இருக்கப் பழகினால், அத்தகைய உறவானது நீண்ட காலம் பயனளிக்கக் கூடும்!

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.

(அதிகாரம்:மன்னரைச் சேர்ந்தொழுகல்; குறள் எண்:691)

என, ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே வள்ளுவர் சொன்ன அறிவுரைதான் இது என்றாலும், அதை எனது தந்தையாரின் அனுபவப் பாடம் எங்களுக்குச் சிறப்பாகப் புரிய வைத்தது என்பது மிகையாகாது!

~ஸ்வாமி | ‘@PrakashSwamy

Website Powered by WordPress.com.

Up ↑