மதுரை எஸ்.எஸ்.காலனியில், பார்த்தசாரதி தெரு மற்றும் சத்சங்கம் பிள்ளையார் கோயில் உள்ள வீதிகளில் (தெருப்பெயர் நினைவில்லை – சத்சங்கம் வீதி/சாலை என்றே கூட இருக்கலாம்), எண்ணற்ற நாட்கள், மண்டையைப் பிளக்கும் வெயிலில், சில பால்ய சினேகிதர்கள் சேர்ந்து, திரிந்து க்ரிக்கெட் (மட்டுமல்ல) விளையாடியிருக்கிறோம்.
பெரும்பாலும் ரப்பர் பந்து; சிறுபாலும் டென்னிஸ் பந்துதான். பேட் யாரோ வைத்திருந்தார்கள். ஸ்டம்ப் ஏதேனும் குச்சிகள்தான் – மண் குவித்து, அல்லது இரண்டு செங்கல் வைத்து நிற்க வைப்போம். நேரம் போவதே தெரியாமல், அயராமல், தீவிரமாக ஆடுவோம். அக்கேஷனல் வாகனங்கள் (பெரும்பாலும் சைக்கிள், சில ச்சேட்டக் ஸ்கூட்டர்கள்) எங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிச் செல்லும்!
Quoraவில் இப்பதிவு ~ https://qr.ae/pGQ17K
சத்சங்கம் வீதியிலேயே இருந்த பாலசந்தர் வீட்டில் (மாடி வீடு – அப்பா வங்கி ஊழியரோ!) தாகசாந்திக்கு தண்ணீர் குடித்திருக்கிறோம். குருமூர்த்திதான் ஜிகிரி தோஸ்த். சீதாராமன், சேச்சா, வாசன் போன்றோர் அவ்வப்போது வந்து போவார்கள். சத்யா, பத்து (பத்மநாபன்), அவனுடைய தம்பி ஸ்ரீபதி போன்ற பிற நண்பர்கள் தெரு விளையாட்டுக்கெல்லாம் வந்ததாக நினைவில்லை. விஜி, ஆண்டாள், பத்மினி, ஆர்த்தி போன்ற மகளிர் அணியினர் எங்களோடு விளையாட மாட்டார்கள்.
எல்லோரும் ‘ஸ்ரீ வித்யாலயம்‘ ஸ்டூடண்ட்ஸ் (அதற்கு முன்பு கொஞ்ச காலம் ‘பால குருகுலம்‘ பள்ளியிலும் படித்தேன்). ஹெச்.எம். ரங்கநாயகி மிஸ் மிடுக்காக இருப்பார். பின்னாளில் சூக்ஷ்மபுரீஸ்வரன் ஜீ – சமஸ்கிருத ஆசிரியர் – ஹெச்.எம் ஆனார் என்று கேள்வி. பள்ளி இன்னமும் எங்களது பால்ய கால நினைவுகளைப் பாதுகாத்தபடி, அதே இடத்தில் இருக்கின்றது.
எஸ்.எஸ்.காலனியிலேயே, வேறொரு பகுதியில் (பிராமண கல்யாண மஹால் அருகில் என்று ஞாபகம்) வசித்த ஹரி, நாராயணன் போன்றோர், எங்கள் ஏரியாவில் விளையாட வந்ததில்லை. அவர்களது பேட்டையில் விளையாடுவார்களோ என்னவோ. அவர்களது உறவினரான விஜயலக்ஷ்மி என்கிற விஜியை (கிளாஸ்மேட்களில் மிக வசீகரமானவள் – என் முதல் கன்றுக்குட்டி காதலாக இருக்கலாமோ என்னவோ… ரொம்ப சின்ன பையன்ணே அப்பல்லாம் 😂) பார்க்கிற ஆர்வத்தில், அந்த ஏரியாவுக்குள் ஒருசில முறை போய் வந்திருக்கிறேன். நாராயணன் வீட்டில் இருந்த ரோஜா செடி இன்னமும் ஃபிரஷ்ஷாக நினைவிருக்கிறது.
பிராமண கல்யாண மஹாலில்தான் பின்னர் என் திருமணம் நடைபெற்றது. அப்போது அவர்கள் யாரும் அங்கிருந்ததாகத் தெரியவில்லை. மண்டபம் தற்போது சிறப்பாக உருமாறி விட்டாலும் (பார்க்க படம்), ஏரியா பெரிதாக மாறவில்லை. இரண்டு தெருக்களுக்கு இடையில் ஒரு மிகக் குறுகலான சந்தில் இருந்த பிரபல பிள்ளையார் கோயிலும், அதை அடைவதற்கான – இரு தெருக்களையும் இணைக்கும் – சின்ன இரும்புக் கதவும் இன்னமும் இருக்கின்றன. வெள்ளி விழாவெல்லாம் கொண்டாடிவிட்ட மகிழ்வில், சரித்திரப் புகழ்பெற்ற (அட, எங்க வாழ்க்கை சரித்திரம்ணே/க்கா!) திருமணம் நடைபெற்ற மண்டபத்தின் உள்ளே போய் பார்க்கலாமா என்றபோது, தற்போதைய மேனேஜர் 0.5% ஆர்வம் கூட இல்லாமல், போனால் போகிறதென்று அனுமதித்தார்!
மதுரையில் ஒருமுறை பெருவெள்ளம் வந்து (சித்திரை திருவிழாவின் போது, அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக அணை திறந்து விடுவதால் ஓடும் சுமாரான பிரவாகம் தவிர்த்து, வைகையில் பெரும்பாலும் கோவண அகலத்துக்குத்தான் தண்ணீர் ஓடும் என்பதால், ஊருக்குள் வெள்ளம் வந்தது பேரதிசயம் – பல பூமர்களுக்கு இன்னமும் நன்றாக நினைவிருக்கும்) எஸ்.எஸ்.காலனியிலெல்லாம் வெள்ளம் வந்தபோது, அரை டிராயர் நனையும் அளவிற்கு இருந்த வெள்ள நீரில், தண்ணீர் பாம்புகளுடன் சேர்ந்து (யாரோ பெரியவர் எங்கள் அருகில் வெள்ள நீரில் நீந்திய பாம்பைக் காட்டி, ‘தண்ணிப் பாம்புதான் தம்பிகளா.. கடிக்காது.. தைரியமா போங்க’ என்று ஊக்கமளித்தார்) இந்த நண்பர்கள் குழு, அட்வென்ச்சர் வாக்கெல்லாம் போயிருக்கிறோம்.
பார்த்தசாரதி தெருவிலிருந்து வீடு மாறி (அந்த வீடும், அது இருக்கும் சந்தும், ஆச்சரியகரமாக இன்னமும் அப்படியே காலம் உறைந்து போன மாதிரி இருக்கின்றன – பார்க்க பு.ப), சுப்பிரமணிய பிள்ளை வீதி (இந்த வீடு இடித்துக் கட்டப்பட்டு விட்டது என்றாலும், அருகிலுள்ள ஸ்டோர், அஃதாவது தற்கால ‘ரோ ஹௌஸ்,’ இன்னமும் அப்படியே இருக்கிறது – இங்குதான் ஷண்முகம் மிஸ் என்கிற பிரபல ஹிந்தி டீச்சர் அப்போது வசித்தார்), சத்சங்கம் பின்னாலுள்ள ஜவஹர் வீதி (இங்கு எதிரில் இருந்த ஸ்டோர் வீடுகளில் ஒன்றில் ஆண்டாள் என்கிற நண்பி வசித்தாள்… காம்ப்பவுண்ட் சுவரில் ஏறி நடக்கும் வித்தியாசமான பெண்… அங்கு வசித்தபோது ஒருமுறை பெரிய புயல் வந்தது… இரு வீடுகளும் இன்னமும் மாறாமல் இருப்பது (பார்க்க பு.ப) காலத்தால் அழியாத மதுரையின் எண்ணற்ற ஆச்சரியங்களில் ஒன்று) போன்ற இடங்களில் வசித்த காலத்தில், விளையாட்டு பற்றிய ஞாபகங்கள் ஏனோ மழுப்பப் பட்டுவிட்டன.
உயர்நிலைப் பள்ளிப் படிப்பிற்கு திண்டுக்கல் சென்று, லெஜண்டரி எம்.எஸ்.பி. சோலை நாடார் நினைவு மேல்நிலைப்பள்ளியில் படித்த காலத்தில் (இங்குதான் எனது தமிழ் பேச்சு, எழுத்து போட்டிகள் பங்கேற்பிற்கும், பொதுவாகவே புதியன அறியும் தாகத்திற்கும் விதை போடப்பட்டது – நன்றி தமிழ் ஐயா பெரியசாமி மற்றும் ஹிஸ்டரி ஆசிரியர் அல்ஃபோன்ஸ்), 7-ஸ்டோன்ஸ், கோ-கோ, கபடி என்று வேறு விளையாட்டுகள். கபடியில் ஜித்தனான எனக்கு, பள்ளி நண்பர்கள் இட்ட பெயர் ‘ஊசி பாசி.’
அங்கு வருடந்தோறும் நடந்த மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி மிகப் பிரபலம். மதுரா கோட்ஸ், தூத்துக்குடி போர்ட் டிரஸ்ட் அணிகள், ஐ.பி.எல் காலத்திற்கு முந்தைய சூப்பர் ஸ்டார்ஸ் டீம்கள். வார இறுதி விடுமுறை நாட்களில், சைக்கிளில் தனியே பள்ளிக்குச் சென்று, கூடைப்பந்து போட்டிகளை ரசித்திருக்கிறேன்.
அப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தபோது, அஃபீஷியலாக மாவட்ட அளவிலான தடகள போட்டி செலக்ஷனில், அப்போதைய சேம்பியனான குமரனை விட 100 மீட்டர் ஓட்டத்தில் வேகமாக ஓடித் தேர்வானேன். அதை வீட்டில் சென்று சொல்லி மகிழ்வதற்கு முன்பே, ப்பீ.ட்டீ மாஸ்டர் லாங் ஜம்ப் டிரையலுக்கு போக வைக்க, எந்தவிதமான பிரிப்பரேஷனோ, வழிகாட்டுதலோ இல்லாமல் ஓடி, தாவி, லேண்டிங் ஆகும்போது எடக்குமுடக்காக ஏதோ தவறாகி, இடது கால் முட்டி பெயர்ந்து விட்டது. அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று, கட்டுப் போட்டு, வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.
ரிப்பேரான (ஆக்கப்பட்ட!) காலை சரி செய்ய, மதுரையில் ஒன்று, திண்டுக்கல்லில் ஒன்று என்று இரண்டு மேஜர் சர்ஜரி. ரெக்கவரிக்கு சில மாதங்கள் ஆனதால், பத்தாம் வகுப்பை டிஸ்கன்ட்டினியூ பண்ணி, அடுத்த வருடம் தொடர வேண்டியதாகி விட்டது (இச்சமயத்தில் ஓவியம் மற்றும் கவிதை எழுதும் திறன் பாலிஷ் போடப்பட்டது; சில மாதங்கள் இறை நம்பிக்கை இழந்துமிருந்தேன்!). அத்தோடு, இப்பிறவியில் என்னுடைய சர்வதேச (அட் லீஸ்ட் தேசிய!) சாத்தியங்கள் இருந்த விளையாட்டு அத்தியாயம் முடிந்து போக, நீரஜ் சோப்ரா 21ம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தத்தில் வெற்றி வாகை சூடும் வரை, தடகள ஒலிம்பிக் தங்கத்திற்காக பாரதம் காத்திருக்க வேண்டியதாகி விட்டது, எவ்விதத்திலும் என்னுடைய தவறில்லை என்று பாரதவாசிகளுக்கு இவ்விடம் அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்!
பத்தாம் வகுப்பை மட்டும் ராமநாதபுரத்தில் (சையது அம்மாள் மேநிலைப் பள்ளியும், அதன் ஆசிரியர்களும் வந்தனத்திற்குரியவர்கள் – இடைவிடாமல், புதிய மாணவனான என்னை ஊக்குவித்து, மாநில ரேங்க் வாங்க வைத்து அசத்தினார்கள்) படித்து விட்டு, அதன்பின்னர் மறுபடி மதுரைக்கு வந்து, நேரு நகர் வாசியாகியானபின், அடியேன் படிப்பு, எழுத்து, பிழைப்பு என்று தடம் மாறி விட்டேன்.
மேனிலைப்பள்ளி படிப்பு முடித்த டிவிஎஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஆங்கில (+ வகுப்பு) ஆசிரியரான கிரிஜா மிஸ்ஸும் (படத்திலுள்ளவர்), தமிழ் ஆசிரியை கமலம் அம்மாவும் (இவர் தீபம் நா பார்த்தசாரதியின் கேள்வி-பதில் தொகுப்பெல்லாம் வெளியிட்டிருக்கிறார்; என்னைத் தமிழில் தொடர்ந்து எழுதத் தூண்டியவர்களுள் குறிப்பிடத்தக்கவர்) என்னுடைய இரு மொழி ஆர்வத்தையும் ஊக்குவித்து வளர்த்த பெரியோர்கள். அக்காலத்தில் விளையாட்டெல்லாம், எப்போதாவது வீட்டு மாடியிலோ, வாசலிலோ, என் தம்பிகளுடன் ஆடிய பேட்மிண்ட்டன் மட்டும்தான்.
மெப்கோவில் பொறியியல் பட்டப் படிப்பின்போது, ஒரே ஒரு முறை, ஹாஸ்டல் நண்பர்களுடன் சேர்ந்து க்ரிக்கெட் விளையாடியதாக ஞாபகம். ப்பேஸ் பௌளரான நான் அதிவேகமாகப் பந்து வீசி, முதல் பந்திலேயே விக்கெட் எடுக்க, பேட்ஸ்மேன் ‘ஏ, நான் இன்னும் ரெடியே ஆகலை.. அதுக்குள்ள பால் போட்டா எப்படி.!‘ என்று அழுகுணி ஆட்டம் ஆட, எனக்கு வந்த கடுப்பில், அதற்குப் பின்னர் நான் க்ரிக்கெட் ஆடியதாக நினைவில்லை!
எனது மற்றும் எனக்கு அடுத்த தலைமுறையினரில், பாரதத்தின் அதிபிரபல அன்அஃபீஷியல் தேசிய விளையாட்டான க்ரிக்கெட் பிடிக்காதவர்களின் எண்ணிக்கை ரொம்ப குறைவு. ’83 உலகக் கோப்பை பற்றி செய்தித் தாள்களில் படித்தும், ரேடியோவில் கேட்டும்தான் தெரியும். அப்போது தொலைக்காட்சியெல்லாம் கிடையாது. தோனி என்கிற ‘கேப்டன் கூல்‘ தலைமையில், இந்த நூற்றாண்டில் மறுபடியும் உலகக் கோப்பையை வென்றபோது, தொலைக்காட்சியை ஆஃப் செய்ததே இல்லை. பெருமிதத்தில் ச்செஸ்ட் சில அங்குலங்கள் எக்ஸ்டிராவாக விரிந்தது. டெண்டுல்கரை தோளில் தூக்கிக் கொண்டு இளம் வீரர்கள் மைதானத்தில் ஊர்வலம் வந்தபோது, கண்ணில் நீர் வழிந்தது சத்தியம்.
இருபத்தோராம் நூற்றாண்டில் அடியேன் சிஎஸ்கே மற்றும் தோனியின் டை ஹார்ட் ஃபேன். சிங்கம் உறுமும் மஞ்சள் டீ சர்ட் அணிந்து, பிள்ளையுடன் சேப்பாக்கம் போய் ச்சியர் பண்ணியிருக்கிறேன். அமெரிக்க கிளையண்ட்டுகளைக் கூட்டிச் சென்று, ‘திஸ் கேம் இஸ் பேஸ்பால்’ஸ் கிராண்ட்பா,‘ என்று கதைவிட்டு அசத்தியிருக்கிறேன்.
‘எம்எஸ்டி’ என்பதை மரியாதைக்குரிய இனிஷியலாகவும், ‘தோனி.. தோனி.. தோனி..’ என்பதை கிட்டத்தட்ட மந்திர உச்சாடனம் அளவிற்கும் மாற்றிய, மஹேந்த்ர சிங் தோனிதான் பாரதத்தின் தற்கால மித்தாலஜிக்கல் ஹீரோ ஈக்குவலண்ட். பல தசாப்தங்களாக ஸ்ட்ரிக்ட் ஹிந்தி எதிர்ப்பு டயட்டில் உள்ள மற(ர!)த்தமிழர்களை, ‘விசில் போடு’ம் விசிறிகளாக மாற்றிக்காட்டிய இந்திக்காரர் இந்த இந்திரஜால தல.
இணையற்ற விளையாட்டுத் திறன், இயல்பான தலைமைப் பதவி வகிக்கும் லாவகம், அன்பிலீவபிள் கெரியர் டிராஜக்ட்டரி எல்லாம் தாண்டி, மகத்தான ஒரு மனிதனாக, ‘தல போல வருமா!’ என்று எண்ணற்றோரை வியக்க வைக்கும் இந்த ஜென் மாஸ்டர் போன்ற சாதனையாளரின் வழிகாட்டியாக ஏதேனும் ஹிமாலயன் யோகி இருந்தால் ஆச்சரியமில்லை!
எனிவே, கடந்த சில வருடங்களாக ஐபிஎல் போட்டிகளைக் கூட அடியேன் பார்ப்பதில்லை. டைம்ஸ் ஆஃப் இண்டியா மற்றும் கூகிள் நியூஸில் அவ்வப்போது மற்ற செய்திகளோடு சேர்த்து, க்ரிக்கெட் நியூஸ் படிப்பதோடு சரி. மூன்று முறை சென்னை மாரத்தானில், என்னுடைய குருநாதரின் கிராமிய கல்வித் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வண்ணம், 10 கிமீ போட்டியில் பங்கேற்றிருக்கிறேன் (வேக நடைதான் – நம்மால்தான் ஓட முடியாதே!). வெறுமனே பங்கேற்றதற்கே மெடல் கொடுத்து ஊக்குவித்தார்கள்!
எஸ்.எஸ்.காலனி க்ரிக்கெட் நண்பர்களில் பத்துவும், அவனது தம்பி ஸ்ரீபதியும், இளவயதிலேயே காலமாகி விட்டனர் என்று கேள்விப்பட்டு, வருந்தினேன். சீதாராமன் அந்த ஏரியாவிலேயே டைலர் கடை வைத்திருந்தார்; இப்போது எங்கிருக்கிறாரோ! சத்யா கிடார் வாசித்துக் கொண்டு ஏதோ மியூசிக் ட்ரூப்பில் இருந்ததாகக் கேள்வி.
விஎம்எஸ் வாசன் பிரபல கேட்டரர் ஆகிவிட்டார் என்றார்கள். சமீபத்தில் எங்கள் குடும்ப விழா ஒன்றிற்கு அவர்தான் சாப்பாடு சப்ளை என்று தெரிந்து, ரொம்ப ஆர்வமாக சத்சங்கத்தில் காத்திருந்து, அவனை(ரை!) சந்தித்தேன். தமிழ்ப் படங்களில் வரும் லாங் லாஸ்ட் நண்பர்கள் சீன் மாதிரி இல்லாமல், ஓரிரு நிமிடங்கள் சுருக்கமாகப் பேசிவிட்டு, படக்கென்று காணாமல் போய்விட்டார். மஸ்ட் பீ எ பிஸி பிசினஸ்மேன். ஹ்ம்ம்ம்… என் நீண்ட வெண்தாடியைப் பார்த்து இன்ட்டிமிடேட் ஆகி ‘எதற்கு வம்பு’ என்று கழன்று கொண்டாரா, இல்லை இது முற்றிலும் வேறு வாசனா என்று இன்னமும் குழப்பமாகத்தான் இருக்கிறது.
பாலசந்தர், குருமூர்த்தி, நாராயணன், ஹரி, விஜி, ஆண்டாள் போன்ற எஞ்சிய நண்பர்கள் என்ன ஆனார்கள், எங்கு உள்ளார்கள் என்று தெரியாது. யாரேனும் கோராவில் இருந்தால், இவ்விடையைப் படித்தால், கமெண்ட் போட்டால், ‘ஏ, எப்டி இருக்க மாப்ள/ம்மா.. இப்ப என்ன பண்ணிட்டிருக்க..‘ என்று நட்பு தூசி தட்டப்படலாம்!
எபிலாக்: என்னுடைய ஸ்போர்ட்ஸ் கேரியர் ‘கால்’குறையாக நின்றுபோனதாலோ என்னவோ, என்னுடைய பிள்ளையை ஒரு ஸ்போர்ட்ஸ்பெர்ஸனாக்கியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு, மிஸ்டர் & மிசஸ் ஸ்வாமி இருவருமாக இணைந்து அதை சாதித்தே விட்டோம். அவர் உண்மையாகவே ஒரு சர்வதேச விளையாட்டு வீரர். ஆனால், அது பற்றி வேறு ஒரு தருணத்தில்…
கு: மதுரை ஸ்பெஷல், பால்ய கால மலரும் நினைவுகளை, வாசக அன்புள்ளங்களுடன் பகிர வாய்ப்பளித்த வினாவிற்கு நன்றி.🙏 ச்சாவ்!👋🏼
பி.கு: என்னுடைய இல்லத்தரசி, அவருடைய பள்ளிக்கால தோழர்/ழிகளுடன் இன்னமும் தொடர்பிலிருக்கிறார். மதுரை டிவிஎஸ் சுந்தரம் மேனிலைப்பள்ளி மாணாக்கர்களான அவர்கள் அனைவரும், தினசரி வாட்ஸாப் அளவலாவல்கள், பிறந்த/திருமண நாள் வாழ்த்துக்கள், வருடாந்திர கெட் டுகெதர் (கரோனா காலத்திற்கு முன் வரை), வீடுகளுக்கு விஸிட் அடித்து சந்தித்தல், பிள்ளைகளின் திருமண விழாக்களில் பங்கெடுத்தல் என்று, தங்களது குழந்தை/இளமைப்பருவ நினைவுகளின் தணல் அணைந்து விடாதவாறு பாதுகாத்து வருகிறார்கள். பேச்செல்லாம் இன்னமும் ‘வாடா.. போடி..’ ரகம் (ஒரு சிலருக்கு ஏற்கனவே பேரக் குழந்தைகள்!).
அடியேன் இதற்கு நேர் எதிர். என்னுடைய எழுத்தை (வாட்ஸாப் பகிர்வு வழியே) வாசிக்கும் ஓரிரு கல்லூரி நண்பர்கள் தவிர்த்து, வேறு எவருடனும் தொடர்பு ஏதுமில்லை. பள்ளி/கல்லூரி வாட்ஸாப் க்ரூப்பிலோ, வேறு எந்த சமூக ஊடகக் குழுக்களிலோ நானில்லை. அதுபற்றிய வருத்தமும் ஏதுமில்லை. டிஃபரண்ட் ஃபோக்ஸ்.. டிஃபரண்ட் ஸ்ட்ரோக்ஸ்.. என்கிற மாதிரி, ஹோமோ சேப்பியன்கள் என்ற உயிரினத்தில்தான் எத்தனை வகை ஆச்சரியங்கள்! 🤓
~ஸ்வாமி | ‘@PrakashSwamy