25 வயதில், சுய சம்பாத்தியம் இல்லாமல், படித்துக் கொண்டிருப்பவருக்குப் பிறர் கருத்தால் என்ன பயன்!

ஓம் ஸ்வாமி என்று ஒரு குரு. இமயமலைச் சாரலில் ஆஸ்ரமம் அமைத்து, உலகெங்கிலும் உள்ள ஆன்மீக ஆர்வலர்களுக்கு வழிகாட்டி வருகிறார். தேவி உபாசகர். இவரது வழிமுறை மிகத் தொன்மையான, கிட்டத்தட்ட ரிஷிகள் காலத்து தந்திர சாதனா. இவரது வகுப்புகளில் பல மந்திர சாதனைப் பயிற்சிகள். வயது 41தான் ஆகிறது.

அன்னார் சொந்தமாக சர்வதேச ஐ.ட்டி நிறுவனம் நடத்திக் கொண்டிருந்தார். உலகம் சுற்றிய வாலிபன் + செல்வந்தர். முப்பதுகளில் அத்தனையையும் துறந்துவிட்டு (மல்ட்டி மில்லியன் நிறுவனத்தை நண்பரிடம், ‘மாதச் செலவுக்கு ஒரு பத்தாயிரம் ரூபாய் மட்டும் கொடுப்பா, போதும்’ என்று அளித்து விட்டார்), உண்மை தேடிப் பயணம். ஒரு குருவுடன் சிலகாலம். பின்னர் இமயத்தில் தனிமைத் தவம். உண்மை தேடியவருக்குக் கிட்டியதோ தேவி தரிசனம். ஆதியோகி எந்தை ஈசனின் வாமபாகி, அக்மார்க் ஜகத்ஜனனியாகிய சக்தியேதான். நேரடி தரிசனம்!

அவரது சுயசரிதத்தில் (If Truth Be Told by Om Swami) அந்த தேவி தரிசன அனுபவத்தைப் பற்றிப் படித்தபோது அடியேனது விழியிலிருந்து மடைதிறந்த வெள்ளம். எப்படிப்பட்ட பாக்கியவான்! எனிவே, தற்போது டிஜிட்டல் யுக ஆன்மீக ஆர்வலர்களுக்கு வழிகாட்டும், ட்டெக் ஸாவ்வி குரு. நிற்க.

தங்களது வினாவிலிருக்கும் சில தகவல்களைப் பார்ப்போம். பின்னர் இதற்கும், அதற்கும் ஒரு இணைப்புக் கொடுக்கலாம்.

’25 வயதிலும்…’

ஆரோக்கியமான உடல் மற்றும் சிந்தை உள்ள மனிதனுக்கு, கால் நூற்றாண்டு என்பது, வாழ்நாளின் மூன்றில் ஒரு பங்கு என்று வைத்துக் கொள்வோம் (ஆண்+பெண் இருபாலரின் சராசரி ‘வாழக்கூடிய காலம்’ தற்போது 73.2 ஆண்டுகள்). இன்னமும் இரண்டு ‘கால் நூற்றாண்டு’ இன்னிங்ஸ் உங்களுக்கு பாக்கி இருக்கின்றது, இப்பிறவியிலேயே – உடல் மற்றும் மன நலத்தைப் பேணினால்! ஆக, ’25 வயதிலும்’ என்பது ஒரு மேட்டரே இல்லை.

‘சுய சம்பாத்தியம் இல்லாமல்…

இது அவரவரது குடும்ப / வாழும் சூழலைப் பொறுத்தது. ‘படிக்கற வரைக்கும் நல்லாப் படிய்யா; செலவெல்லாம் நாங்க பாத்துக்கறோம்‘ என்கிற பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ உள்ளவர்களுக்கு இது பிரச்சினை இல்லை. மத்யமர் வர்க்க, நேர்மையான அரசு ஊழியரான என் தந்தை, அடியேன் உட்பட, தன் ஐந்து பிள்ளைகளையும் பட்டப்படிப்பு படிக்க வைத்தார். அவரால் செய்ய முடியாது போன ஒன்றை, அடுத்த தலைமுறையினர் சாதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான் அதற்குக் காரணம்.

விளையாட்டு + கல்வி என்ற இரட்டைக் குதிரைச் சவாரியை வெற்றிகரமாகச் செய்த எனது ஒரே பிள்ளை, கோவிட்-19 காரணமாக விளையாட்டுத் தளத்தில் இயக்கம் முற்றிலும் நின்றுபோன போது, சுமார் பதினைந்து வருட விடாமுயற்சியை, சிகரத்திற்கு அருகிலிருக்கும் நிலையில், அப்படியே ப்பாஸ் செய்துவிட்டு, ‘இப்போது மேற்படிப்புப் படிக்கப் போகிறேன்‘ என்று முடிவெடுத்தபோது, எந்தத் தடையும் சொல்லாமல் நாங்கள் ஊக்குவிக்கவே செய்தோம் (கொஞ்சம்போல வருத்தம் இருந்தாலும்). அவனது எதிர்காலம் அவனது தேர்வே (ச்சாய்ஸ்) என்பதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை. இதுபற்றிய பதிவு இங்கே…https://qr.ae/pGZipe

தங்களது நிலை என்னவென்று அடியேன் அறியேன். நீங்கள் சம்பாதித்துக் குடும்பத்தை கவனிக்க வேண்டிய தேவை இருந்தால், அதைத் தவிர்க்க முடியாதுதான். ஆனால், பணிபுரிவது மேலும் படிப்பதற்கு ஒரு தடையில்லை என்பதற்கு என் வாழ்விலேயே பல உதாரணங்களைப் பார்த்திருக்கிறேன். சில நடைமுறை சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால், என்ட்ராப்மெண்ட்டில் ஷான் கானரி, கேத்தரின் ஸீட்டா ஜோன்ஸிடம் சொல்லிய மாதிரி, ‘இட்ஸ் இம்ப்ராபபிள், பட் நாட் இம்ப்பாஸிபிள்.’

வாழ்க்கை ஸ்ப்ரிண்ட் ஓட்டம் அல்ல; மராத்தான் ஓட்டம். இறுதி இலக்கை அடைய வேண்டும் என்ற ஆர்வம் + தீவிரம் உள்ளோர்,  கஷ்டப்பட்டாலும் ஒடித்தான் ஆகவேண்டும்.~ஸ்வாமி

‘இந்திய ஆட்சிப் பணிக்குத் தயார் செய்து கொண்டிருக்கிறேன்…’

வாழ்த்துக்கள் வருங்கால கலெக்ட்டர், ஊப்ஸ் ‘மாவட்ட ஆட்சியர்’ அவர்களே. தற்காலத்தில் இம்மாதிரியான போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்வதற்கு ஏராளமான களங்கள், தளங்கள், ஊடகங்கள், நூல்கள், வழிகாட்டிகள் உள்ளனர். முடிந்த அளவு அவற்றைப் பயன்படுத்தி, முனைப்போடு தயார் செய்யுங்கள். வேறு யாருடனாவது ஒப்பீடு செய்வதை மட்டும் தவிர்த்து விடுங்கள். அதனால் தேவையற்ற தலைவலிதான் வரும். உங்களது முயற்சி நீங்கள் அடையவேண்டிய குறிக்கோளை, நிலையை மட்டுமே நோக்கியதாக இருப்பது முக்கியம்.

‘இதுபற்றிய உங்கள் கருத்து என்ன?’…

கருத்துக்கள் குதத்துளையைப் போன்றவை. எல்லாரிடமும் ஒன்றாவது இருக்கும். எல்லாமே நாற்றமடிக்கும்‘ என்று எங்கோ படித்து, ரசித்து, சிரித்ததாக ஞாபகம். பிறருடைய கருத்துக்களால் நம்முடைய வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் நிகழப்போவதில்லை. அதேபோல், நம்முடைய கருத்துக்களால் பிறருடைய வாழ்வில் பெருத்த மாற்றம் எதுவும் நிகழப்போவதுமில்லை. ஆனால், இரு தரப்பிலும், ஏமாற்றம் நிகழ நிறையவே வாய்ப்பிருக்கின்றது.

படம்: பிறரது கருத்தையெல்லாம் கேட்டு, காலம் + சக்தி விரயம் செய்யாமல், தங்களுடைய நோக்கத்தின் மீதிருந்த தீவிரம் மற்றும் அயராத சுயமுயற்சியால் சாதித்தவர்கள்!

ஓம் ஸ்வாமி மல்ட்டி மில்லியன் டாலர் சுயதொழிலை விட்டுவிட்டு மெய்யறியவோ, தேவி தரிசனம் பெறவோ செல்வதற்கு முன், யாருடைய கருத்தையும் கேட்டதாகக் குறிப்பிடவில்லை (அப்பாடா, அந்த முன்கதையையும், இந்த வினாவையும் இணைத்தாகிவிட்டது). அது அவரது தேர்வு + முடிவு. அதில் அவர் வெற்றி பெற்றார்.

எட்மண்ட் ஹில்லரியும், ட்டென்ஸிங் நார்கேயும் 28,839 அடியில், அதுவரை மனிதர்கள் கண்டிராத / அனுபவித்திராத பயங்கரமான குளிர் மற்றும் காற்றுக்கிடையே, பின்னாளில் ‘ஹில்லரி ஸ்டெப்’ என்றே பெயர்சூட்டப்படவிருக்கும் இக்கட்டான ஒரு இடத்தில் நின்றபோது, ‘மேற்கொண்டு ஸாகர்மாதா / ச்சோமோலுங்மா சிகரத்தில் ஏறுவதா, இல்லை வந்த சுவடு தெரியாமல் கீழே இறங்கிப் போய்விடலாமா‘ என்று யாரிடமும் கருத்துக் கேட்கவில்லை. கேட்பதற்கு அங்கு அந்த மலையையும், பனியையும், விண்ணையும், காற்றையும் தவிர வேறு யாருமில்லை என்பது வேறு விஷயம். அவர்களது சாதனை என்னவென்று உலகிற்கே தெரியும் (ஐ.ஏ.எஸ். ஆக முயற்சிக்கும் உங்களுக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும்)!

இந்திய ஆட்சிப் பணிக்குத் தயார்செய்து, ‘இ.ஆ.ப’ என்று பெயருக்குப் பின் இணைத்துக் கொண்டு, ஆட்சிப் பணியில் பதவி பெற்று, மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் (அதுக்குத்தானே படிக்கிறீங்க.. இல்ல ட்டெம்ப்ளேட் தமிழன் மாதிரி வேற ஏதேனும் சினிமா-இன்ஸ்பையர்ட் காரணம் இருக்கா!) என்பது உங்களது எண்ணம் / திட்டம் / நோக்கம் / குறிக்கோள் / ஆர்வம் / ஆசை / கனவு என்று எதுவாக இருந்தாலும், அதில் உங்களது சாதனை என்னவாக இருந்தாலும், அது முற்றிலும் உங்களது ஆர்வம் + முயற்சியைச் சார்ந்ததே. பிறரது கருத்தை எல்லாம் இந்தக் காதில் வாங்கி, அந்தக் காது வழியாக வெளியே விட்டுவிடுங்கள்.

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்

துன்பம் துடைத்தூன்றும் தூண்.‘ என்கிறார் வள்ளுவர் (குறள் #615).

‘தன் இன்பத்தை விரும்பாமல் எடுத்த காரியத்தை முடிப்பதை விரும்புபவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தை நீக்கி அவர்களைத் தாங்கும் தூண்’ போன்றவனாம்.

யார், யாரோ போகிறபோக்கில் அள்ளி வீசும் கருத்துக் குவியலை எல்லாம் தலையில் சுமந்து கொண்டு திரிந்தால், 30 வயதிலும் இதே கேள்வியைத்தான் கேட்டுக் கொண்டிருப்பீர்கள் – கோராவிலோ, வேறொரு ஊடகத்திலோ. அப்புறம் ட்டு-பீ-கலெக்ட்டர் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் எல்லாம், விரக்தியில் வேறு ரோல் மாடலைத் தேட வேண்டி வரும். ‘வ்வாட் எ மேஸிவ் டிஸ்ஸப்பாயிண்ட்மென்ட் தட் வுட் பீ‘ என்று யோசியுங்கள்!

ஊழையும் உப்பக்கம் காண்பார் உலைவின்றித்

தாழா(து) உஞற்று பவர்,‘ என்றும் வள்ளுவரே முயற்சிப்போருக்கு ஊக்கமளிக்கிறார் (குறள் #620).

‘மனத் தளர்ச்சி இல்லாமல் முயற்சி செய்கிறவர்கள் விதியையும் துரத்தி விடலாம்’ என்று வள்ளுவரே கியாரண்ட்டி கொடுக்கிறார் சார்!

அதனால் பிறர் கருத்தைல்லாம் கேட்காமல் (ஐடியா, இன்ஸைட், வழிகாட்டுதல் போன்றவற்றை தாராளமாகக் கேளுங்கள்), உங்களது முயற்சியைத் தீவிரமாக்கி, நோக்கத்திலிருந்து கவனம் சிதறாமல், வெகு விரைவில் நீங்களே எல்லோருக்கும் ரோல் மாடலாகி விடுங்களேன்!

25 வயதிலும் சுய சம்பாத்தியம் இல்லாமல் இந்திய ஆட்சிப் பணிக்கு தயார் செய்து கொண்டிருக்கிறேன். இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

Quoraவிடை ~ https://qr.ae/pGS601


~ஸ்வாமி | ‘@PrakashSwamy

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑