மௌனம் ~ ஒரு க-விதை!
.
கல்வி, கேள்வி, விவாதம், வினா-விடை
வாழ்நாள் முழுவதும்
இடைவிடாது பேசி சேர்த்து,
ஓயாது சப்தத்துடன் செலவழித்த,
சொற்களின் பெரும் குவியல்கள்…
எட்டுத் திசையிலும்…
மேலும், கீழும்…
.
வாழ்வு முடியும் கணத்தில்,
கனத்த மௌனத்தின் இருப்பில்,
தேவையற்ற,
பயனற்ற,
அர்த்தமற்ற
குப்பைக் குவியலாகவே
தோன்றுகின்றன…
அத்தனை சொற்களும்!
.
கடைசி மூச்சு வெளியேறும் கணம்…
‘கங்கைச் சொம்பை எடுத்து வா..‘
‘விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லு..‘
மேலும் சப்தங்கள்..
வெற்று ஓசைகள்…
.
சப்தத்தின் இடையில்தான்
மௌனம் மறைந்திருக்கின்றது.
சப்தமேதுமின்றி…
மௌனத்தின் இருப்பில்தான்
மெய் நிறைந்திருக்கின்றது!
நிறைகுடமாய்…
நீர்தளும்பாமல்…
.
ரத்தமும், மலமும் பூசி
மௌனமான இருட்டறையிலிருந்து
சத்தமான குளிரறைக்குள் இழுக்கப்பட்ட
முதல் அலறல் கணத்திலிருந்து,
இடம், வலம்..
ஈடா, பிங்களா..
சக்தி, சிவம்..
என்னுள்ளேயே இதுவரை
சுற்றி சுற்றி வந்த பிராணன்,
சொல்லாது போனது என்னைவிட்டு…
மௌனமாய்த்தான்!
.
‘கண் வழியா உயிர் போச்சு பார்த்தாயோ!‘
கேள்விகள்.. பதில்கள்..
‘அடடே, ஆஞ்னா வழியாவா.. என்ன பாக்கியம்!‘
ஆச்சரியங்கள்.. பெருமிதங்கள்..
.
பேசி.. பேசி.. பேசி.. பேசி..
சிதறிக்கிடக்கும் சொற்குவியலிடையே
அர்த்தம் தேடும் அகழ்வாராய்ச்சி
எப்போதும் நடந்துகொண்டே இருக்கிறது.
ஒவ்வொரு வீடும் கீழடிதானோ!
.
உடலுக்கு உபவாசம் விரதம்.
மனதுக்கு உபவாசம் மௌனம்.
விரதமிருந்ததில்லை பெரிதாக,
இருந்தவரையில்.
இனி இருக்க வேண்டியதுமில்லை!
.
மனம் மட்டும்
சுற்றிச் சுற்றி வந்தது அறையை…
மௌனமாய்…
சுதந்திரமாய்…
யார் கண்ணிலும் படாமல்.
.
எங்கே போயின எண்ணங்கள்!
அலையலையாய் வருமே,
அடங்காமல்…
எத்தனை முயற்சி..
எவ்வளவு பயிற்சி..
மனத்தை அடக்குகிறேன் என்ற பேரில்!
அறியாமைக் கூத்து.
.
அறையின் மையத்தில் நான்.
கிடந்த திருக்கோலம்.
நாராயண.. நாராயண..
மஞ்சள் மாலை சார்த்தப்பட்டு,
மௌனமாய்…
வாயில் ஒரு கீற்றுப் புன்னகையுடன்,
வெறும் உடலாக நான்.
அடையாளம் அற்றுப் போன,
அதை வெறித்துப் பார்த்தபடியும் நான்!
.
அம்மையே.. அப்பா.. ஒப்பிலா மணியே…
எங்கே உம் கணங்கள்?
எப்போது கயிலாய வருகை!
நந்தி மத்தளம் வாசிப்பாரா?
தேவாரமும் தெரியாது..
திருவாசகமும் தெரியாது..
எனக்கெங்கே கயிலாய வாசம்!
கண்ணில் நீர் வரச் சிரித்தேன்…
மௌனமாய்!
.
‘ஐஸ் பாக்ஸுக்கு சொல்லியாச்சா..?‘
‘வாத்தியார்கிட்ட யார் பேசினது..?‘
‘பாடிய எப்போ எடுக்கறாங்களாம்..?‘
‘புள்ள வரணுமே.. நாளைக்குத்தான் இருக்கும்.!‘
‘அம்பது காஃபி சொல்லிடுங்க.. வேணுமே எல்லாருக்கும்..‘
.
மௌனத்தின் சன்னிதானத்தில்
சொற்களால் பூஜிக்கும்
காரண அறிவின்
கற்ற மடமை!
.
பேசிக்கொண்டே இருந்தார்கள்.
என்னுடைய பயோகிரஃபியை..
வெற்றிகளை.. தோல்விகளை..
கபடமோ, பொய்யோ அற்ற
சுத்தமான சரிதம்!
‘போனவர் போயிட்டார்..
தப்பா எதுவும் பேச வேண்டாமே..‘
வினோத சமூக விதிகள்!
எல்லாம் அபத்தம்…
எல்லாமே அவசியம்…
.
சுற்றிச் சுற்றிச் சுழன்றன வாசகங்கள்.
சிதறிக் கிடந்தன சொற்கள்.
கொத்துக் கொத்தாய் எழுத்துக்கள்..
உயிர்.. மெய்.. உயிர்மெய்.!
.
முதலில் மௌனமாக இருந்தோம்.
அடுத்து சப்தம் செய்தோம்.
பிறகு சொற்கள் கோர்த்தோம்.
பின்னர் மொழி கற்பித்தோம்.
எங்கும், எதிலும்
சப்தம் மட்டுமே எஞ்ச,
மறுபடி நாடுகிறோம்…
மௌனத்தை!
.
இருந்தவரை கஷ்டப்பட்டு
முயன்ற மௌனம்
மரணத்தில் மட்டும் இலவசமாய்.
யாரிடம் பகிர்வது?
எப்படிக் கொடுப்பது!
.
வாழ்வின் விடைகள்
படைப்பின் விரிவெங்கிலும்
இறைந்து கிடக்கின்றன.
அறிய விழையும் வினாக்களுக்காக
அவை, அசைவற்றுக் காத்திருக்கின்றன.
காலம் கடந்தும்…
மௌனமாய்..!
.
முடிவற்ற அலைகளின் ஆர்ப்பரிப்பில்
அமிழ்ந்து, புரண்டு
ஆயுட்காலத்தை வீணடிப்பதேன்?
மறுபடி.. மறுபடி..
அசைவற்ற பெருங்கடல்,
காலமெல்லாம் காத்திருக்கையில்…
இவ்விடத்திலேயே
மௌனமாய்!
.
இவர்கள் யாரும் அறியார்…
நானும் அறியவில்லை, இதுவரையில்!
ஏன் கற்பிப்பதில்லை
இதையெல்லாம் யாரும்?
ஏட்டுச் சுரைக்காய்!
.
மடமை கடும் விஷம்
மௌனம் திறன்வாய்ந்த மருந்து.
எப்படி சொல்வேன் இனி?
யாரிடம்?
சொன்னாலும் என்ன பயன்?
கேட்டாலும் என்ன பயன்!
.
ஓரமாய் நின்றவரைப் பார்த்தேன்.
அறியாத முகம்.. தெரியாத பெயர்..
விரிசடை முடி… ஓ!
திசைகளை அணிந்த திகம்பரனோ?
சிரித்தார்… சப்தமின்றி.
.
‘ஆட்டம் முடிந்தது. வா போகலாம்.’
நடந்தேன் அவருடன்.
‘போயிட்டு வரேன்..‘
யாரிடம் சொல்கிறேன்?
எவர் கேட்பார்?
நன்றி.. நன்றி.. நன்றி..
யார் கேட்டாலும், கேட்காவிட்டாலும்.
.
நடந்தோம்…
கான்க்ரீட் காடுகளைக் கடந்து,
கரிய நெடுஞ்சாலை கடந்து,
காணி நிலங்கள் கடந்து,
நதிக்கரை நோக்கி.
அவரோடு கூடவே வந்தது
பசுவா… ரிஷபமா!
.
தண்டபாணியின் கோவணமாய் நதி.
பரந்த பெருவெளியாய் வெண்மணல்.
கரையெங்கும் மரங்கள்.
அடர்ந்த மரங்களின் இடையில்
அமைதியாய் அமர்கையில்,
அவையும் நானும் அளவளாவும் தேவை இல்லாததால்…
அர்த்தமற்ற மொழியின் பிடியிலிருந்து
மௌனமாக விடுபட்டேன்!
இதுவா இறுதி விடுதலை?
.
ஆழ்ந்த மௌனத்தின் சன்னிதியில்…
ஆனந்த அமுதை விழிகள் பருகும்
அமைதிச் சாறை செவிகள் அருந்தும்
அருளின் ஒலியை நாசிகள் உண்ணும்
அன்பின் வருடலில் விரல்கள் உறங்கும்
அசையும் தேவையற்று நாவும் அடங்கும்.
.
இந்திரியங்களின் தொழில் மாறி
எல்லாம் தலைகீழ்.
இப்படித்தானா போனபிறகு?
உரக்கச் சிரித்தேன்…
சப்தமே இல்லை!
.
சொற்கள் உதிரி மலர்கள்.
கவிதை மலர்களின் கொத்து.
உரைநடை கதம்பச் சரம்.
பாடல் மலர் அலங்காரம்.
பதிகம் தொடுத்த மாலை.
அர்த்தம் சொல்லின் மணம்.
மௌனம் அர்ப்பணிப்பின் வரம்.
.
வரம் பெற்றுவிட்டேன்
ஒருவழியாக…
ஒரே வழிதானோ!
கேட்கலாமென்று திரும்பினேன்…
எங்கே போனார்?
மெலிதாக ஒரு பிழம்பின் ஒளி மட்டும்…
அருட்பெருஞ்சோதி.. அருட்பெருஞ்சோதி.!
.
மெய்யான மௌனம்…
எதையும், எவரிடமும்
வாய்திறந்து சொல்லாதிருப்பது அல்ல.
எவரிடமும், எதுவும்
சொல்லவேண்டிய தேவையற்றிருப்பது!
.
இனி சொல்லத் தேவையே இல்லை.
எதையும், எவரிடமும்.
விடுதலை.. விடுதலை..
.
வான், நிலவு, நதி, மரம், பசு, நாய், பறவை, பூச்சி…
இயற்கையின் ஒளி-ஒலிக்காட்சி.
மணலில் கிடந்தோம் விண்பார்த்து…
நானற்ற இதுவும்…
என்னுள்ளேயே இருந்த அதுவும்..!
.
காலம், இடம், தினம், மனம்
ஏதுமின்றித் தனியாய்…
இரண்டின்றி ஒன்றாய்…
மௌனமாய்!
.
~ஸ்வாமி | ‘@PrakashSwamy
Leave a comment